காவிரி யாறு தடைகளை யுடைத்துக்
***கழனிகள் செழிப்புறும் வண்ணம்
பூவிரி புனலாய் நனிநடம் புரிந்து
***பொழிலிடைப் பாய்ந்திட வேண்டும் !
தூவிடும் மேகம் நிலத்தினை நனைத்துத்
***துயருறும் மேழியர் வாழ்வின்
தேவைக ளறிந்து வளத்தினைக் கூட்டச்
***சீருடன் பொழிந்திட வேண்டும் !!
கண்ணியத் தோடு கடமைக ளாற்றும்
***கறையிலாத் தலைமையும் வேண்டும் !
அண்டையர் நாடும் வியந்திடும் வண்ணம்
***ஆட்சியை நடத்திட வேண்டும் !
பண்டன மின்றிப் பார்புகழ் நாடாய்ப்
***பாரதம் விளங்கிட வேண்டும் !
தண்டமிழ் மொழியே தனித்துவ மாகத்
***தரணியை யாண்டிட வேண்டும் !
பெண்களை மதித்துப் பெருமையாய்க் கருதிப்
***பேறெனப் பேணிட வேண்டும் !
மண்மிசை பிறந்த பல்லுயிர் யாவும்
***வளத்துடன் வாழ்ந்திட வேண்டும் !
கண்ணெனப் போற்றி யாவரும் கருத்தாய்க்
***கல்வியைக் கற்றிட வேண்டும் !
விண்டலம் முட்டச் சாதனை படைத்து
***வெற்றிகள் குவித்திட வேண்டும் !
வறுமையை யொழிக்கத் தீட்டிடும் திட்டம்
***வண்ணமாய்ச் செயல்பட வேண்டும் !
சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து
***தீயெனப் பொசுக்கிட வேண்டும் !
பொறுமையிற் சிறந்தே இனவெறி களைந்து
***பொதுநலம் காத்திட வேண்டும் !
கறையற விளங்கும் குருவுடை வாழ்த்தில்
***கனவுகள் மெய்ப்பட வேண்டும் !!!
( மேழியர் - உழவர் ; பண்டனம் - போர் )
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment