Wednesday, March 14, 2018

கனவு மெய்ப்பட வேண்டும் ...!!!

காவிரி யாறு தடைகளை யுடைத்துக் 
***கழனிகள் செழிப்புறும் வண்ணம் 
பூவிரி புனலாய் நனிநடம் புரிந்து 
***பொழிலிடைப் பாய்ந்திட வேண்டும் !
தூவிடும் மேகம் நிலத்தினை நனைத்துத் 
***துயருறும் மேழியர் வாழ்வின் 
தேவைக ளறிந்து வளத்தினைக் கூட்டச்
***சீருடன் பொழிந்திட வேண்டும் !!

கண்ணியத் தோடு கடமைக ளாற்றும்
***கறையிலாத் தலைமையும் வேண்டும் !
அண்டையர் நாடும் வியந்திடும் வண்ணம் 
***ஆட்சியை நடத்திட வேண்டும் ! 
பண்டன மின்றிப் பார்புகழ் நாடாய்ப் 
***பாரதம் விளங்கிட வேண்டும் !
தண்டமிழ் மொழியே தனித்துவ மாகத் 
***தரணியை யாண்டிட வேண்டும் !

பெண்களை மதித்துப் பெருமையாய்க் கருதிப் 
***பேறெனப் பேணிட வேண்டும் !
மண்மிசை பிறந்த பல்லுயிர் யாவும் 
***வளத்துடன் வாழ்ந்திட வேண்டும் ! 
கண்ணெனப் போற்றி யாவரும் கருத்தாய்க் 
***கல்வியைக் கற்றிட வேண்டும் !
விண்டலம் முட்டச் சாதனை படைத்து 
***வெற்றிகள் குவித்திட வேண்டும் !

வறுமையை யொழிக்கத் தீட்டிடும் திட்டம் 
***வண்ணமாய்ச் செயல்பட வேண்டும் !
சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து 
***தீயெனப் பொசுக்கிட வேண்டும் !
பொறுமையிற் சிறந்தே  இனவெறி களைந்து
***பொதுநலம் காத்திட வேண்டும் !
கறையற விளங்கும் குருவுடை  வாழ்த்தில் 
***கனவுகள் மெய்ப்பட வேண்டும் !!!

( மேழியர் - உழவர் ; பண்டனம் - போர் )

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment