Thursday, March 29, 2018

தங்கநிலா வானிலே ...!!!


தங்கநிலா வானிலே இன்பவுலா போகையில் 
தரணியெலாம் மகிழுதே !
மங்காமல் இரவெல்லாம் ஒளிதந்து காய்கையில்  
வண்ணநிலா கொஞ்சுதே !
வெங்கதிரோன் வரும்வரை நல்லாட்சி செய்கையில்  
விண்ணகமும் குளிர்ந்ததே !!
திங்களொரு நாளிலே விடுப்பெடுத்து மறைகையில்
சிந்தைவாடிக் கலங்குதே !

கண்சிமிட்டும் தாரகைக் கூட்டத்தின் நடுவிலே 
கால்களின்றித் தவழுதே !
விண்முகில்கள் திரையிட அதைமெல்ல விலக்கியே 
விளையாட அழைக்குதே !
வெண்ணிறத்தில் பளிச்சென இருள்துடைத்து விட்டதும் 
மெல்லினமாய்ச் சிரிக்குதே !
மண்ணிலுள்ள குளத்திலே தன்வடிவம் கண்டதும் 
மயக்கத்தில் மூழ்குதே !!

அழகுநிலா கண்பட வாவியிலே அல்லியும்
அரும்பவிழ்த்துச் சிரிக்குதே !
கழனியிலே கதிரெலாம் கவின்நிலவின் ஒளியிலே 
கதைக்கதையாய்ப் பேசுதே !
முழங்கிவரும் அலைகளும் துள்ளலுடன் நனைத்திட 
முழுநிலவு சிலிர்க்குதே !
நிழல்கூட அருகினில் ஓவியமாய்த் தோன்றிட 
நிலவுமுகம் மலர்ந்ததே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment