Wednesday, March 14, 2018

தமிழன்னை வாழ்த்து !


பல்லவி
உயிராக மெய்யாக உயிர்மெய்யாய்த் திகழ்பவளே
உனையன்றி எமக்கிங்கே உயர்வொன்றும் இல்லையம்மா !
அனுபல்லவி 
இயலிசையாய் நாடகமாய் இருக்கின்ற தமிழன்னாய் !
இருளகற்றும் பேரொளியே இனியவளே வணங்குகின்றோம் !!
சரணம்
கல்தோன்றி மண்தோன்றாக்
***காலத்தே தோன்றிட்டாய்
வெல்லவுனை இவ்வுலகில்
***வேறுண்டோ சொல்நீயே !
இலக்கணமாய் இலக்கியமாய்
***இதயத்துள் நிறைந்திட்டாய்
விலங்கனைய மனத்தினையும்
***விளங்கிடவே செய்திட்டாய் ! ( உயிராக )
வற்றாத வளமையொடு
***மங்காத இளமையொடு
நற்றமிழே வலம்வந்தாய்
***நலிவென்றும் இல்லையம்மா
பொற்பாதம் போற்றுகின்றோம்
***பொற்புடனே வந்தருள்வாய்
மற்றென்ன வேண்டுமம்மா
***மன்றத்தில் மணந்திடுவாய் ! ( உயிராக )
உதிரத்தில் நிறைந்திட்டாய்
***உணர்வுகளில் ஊற்றெடுத்தாய்
அதியழகு ழகரத்தால்
***அன்னாய்நீ அணிசெய்தாய்
கதியென்று உனைப்பற்றக்
***கார்முகிலாய்ப் பொழிந்திடுவாய்
மதிப்புடனே உனைப்போற்றி
***வாழ்த்திடுவோம் எம்தாயே !! ( உயிராக )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment