Tuesday, March 27, 2018

என்னுயிர்த் தோழி ...!!!

எனக்கோர் தோழி இருக்கின்றாள் 
***என்னுள் கலந்தே உயிர்க்கின்றாள் ! 
மனத்தில் உழலும் துயரறுக்க 
***மௌன மொழியாய்த் துணையிருப்பாள் ! 
வனப்பாய் வளைய வந்தவளும் 
***மன்றந் தனிலே சிறக்கவைப்பாள் ! 
கனவில் கூடத் தோன்றிடுவாள் 
***கருத்தாய் வடிவம் காட்டிடுவாள் !! 

இயல்பாய் வருவாள் சிலநேரம் 
***இழுத்தும் வருவேன் சிலநேரம் 
தயவாய் வருவாள் சிலநேரம் 
***தவிக்க விடுவாள் சிலநேரம் 
மயங்கச் செய்வாள் மரபினிலே 
***மையல் கொண்டே அரவணைப்பேன் ! 
முயன்றும் தோற்பேன் அவளிடத்தில் 
***முடிவி லிணைவேன் வெற்றியுடன் !! 

அள்ளு மழகைப் படம்பிடித்தே 
***அவளுள் செதுக்கிக் களித்திடுவேன் ! 
முள்ளாய்த் தைக்கும் கொடுமைகளை 
***முனைந்து முடிந்து வைத்திடுவேன் ! 
கள்ள மில்லாக் காதலையும் 
***கனிவா யினிதே கலந்திடுவேன் ! 
கிள்ளை மொழியாய்ப் பிதற்றிடினும் 
***கிறுக்காய்த் தொடர்வேன் அவளுடனே !! 

மின்னல் கீற்றாய் வெளிப்பட்டே 
***மிடுக்காய் நடையில் கவர்ந்திடுவாள் ! 
தென்றல் காற்றாய் வருடிவிட்டுச் 
***சிலிர்த்த இதயம் நனைத்திடுவாள் ! 
என்றன் இனிய தோழிக்கே 
***இனிதாய் வாழ்த்து பாடிடுவேன் ! 
கன்னல் பெண்ணாம் கவிதையவள் 
***கண்ணின் மணியாய் வாழியவே !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment