Wednesday, March 14, 2018

தூய்மை இந்தியா ...!!!

பல்வளம் நிறைந்த இந்திய நாட்டின்
***பழமையும் புனிதமும் பேணி
வல்லமை யோடு திகழ்ந்திடச் செய்தல் 
***மக்களின் கடமையுள் ஒன்றே !
கல்லையுஞ் செதுக்கிக் கலைநயங் காட்டிக்
***காசினி வியந்திடும் வண்ணம்
நல்லெழி லோடு மாண்புடன் விளங்கும்
***நாட்டினில் தூய்மையைக் காப்போம் !
வரமென வாய்த்த இயற்கையைச் சிதைத்தால்
***வளங்களும் விடைபெறு மன்றோ ?
மரங்களை வளர்த்து வனங்களைக் காத்தால்
***மாசுகள் குறைவது திண்ணம் !
நிரந்தர மாக நெகிழியைத் தவிர்த்து
***நிலவளம் காத்திடு வோமே
அரசுடன் இணைந்து செயல்படில் தானே
***அழகுறும் தீட்டிடும் திட்டம்
குப்பையைக் கண்ட இடங்களில் கொட்டக்
***கொசுக்களின் வசிப்பிட மாகும்
துப்புர வில்லா இடங்களில் தானே
***தொற்றுநோய்க் கிருமிகள் கூடும் ?
அப்பழுக் கில்லா நதிகளில் கலக்கும்
***ஆலைகள் கழிவுநஞ் சாகும்
தப்புகள் மலிந்த அரசியல் அழுக்கைத்
***தாயகம் துடைத்திடில் சிறப்பே !
ஒதுங்கிடு மிடமாய்க் கழிப்பறை யின்றி
***ஊரெது மிருந்திட லாமா ?
பொதுவெளி களிலே எச்சிலைத் துப்பிப்
***பொலிவினைக் கெடுத்திட லாமா ?
பொதுநலத் தோடு தூய்மையைப் பேணப்
***புதியதோர் பாரதம் பூக்கும்
முதலடி வைத்துச் சூழலைக் காக்க
***முயன்றிடில் சிறப்புறும் நாடே !
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment