Wednesday, March 14, 2018

நீ வானம் நான்



நீவானம் நான்மேகம் தொடாமலுனைத் தொடர்வேன்
***நீலவண்ண வீதியிலே நிழலாகப் படர்வேன்
தூவானம் தெளித்தபடி துளிதுளியாய் நனைப்பேன்
***தூரத்தில் இருந்தாலும் சுகமென்றே நினைப்பேன்
பூவாக மணம்வீசிப் பொலிவாக மிதப்பேன் 
***பொன்னந்தி மாலையிலே வெட்கத்தில் சிவப்பேன்
நாவார நான்பாடி என்னருகில் அழைப்பேன்
***நலம்வாழ என்றென்றும் நல்வாழ்த்தை உதிர்ப்பேன் !!
எங்கிருந்த போதுமுனை எந்நாளும் மறவேன்
***ஏகாந்த வேளையிலும் உன்நினைவில் மலர்வேன்
திங்கலொளி மெய்தீண்ட சிலிர்த்தபடித் திளைப்பேன்
***தெவிட்டாத கற்பனையில் தேனிலவாய்க் களிப்பேன்
பொங்கிவரும் நினைவுகளைப் புதைத்துளத்தில் அடைப்பேன்
***புன்னகைத்தே எனக்குள்ளே உனைரசித்துக் கிடப்பேன்
செங்காந்தள் விரலாலே மடலுனக்கு வரைவேன்
***செவியோரம் மெல்லிசையாய் தவழ்ந்துவரு வேனே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment