Wednesday, March 14, 2018

வஞ்சியவள் பேரழகே ...!!!

கல்லெல்லாம் கலைவண்ணம்
***கன்னியவள் சிலைவண்ணம்
சொல்லெல்லாம் தமிழ்வண்ணம்
***சுவையெல்லாம் மதுவண்ணம்
முல்லைப்பூச் சிரித்தாற்போல் 
***முத்துப்பல் பால்வண்ணம்
வில்லாக வளைந்தழகாய்
***விளையாடும் விழிவண்ணம் !

கருங்கூந்தல் கார்வண்ணம்
***கால்கொலுசோ இசைவண்ணம்
மருதாணி யிட்டகையோ
***மயங்கவைக்கும் செவ்வண்ணம்
இருந்தாலும் இல்லாப்போல்
***இடையசையும் எழில்வண்ணம்
விருந்தாகும் காதலுக்கு
***விரலெழுதும் கவிவண்ணம் !

எண்ணத்தில் என்றென்றும்
***இனித்திருக்கும் அவள்வண்ணம்
கண்ணுக்குள் காந்தமென
***கவர்ந்திழுக்கும் கவின்வண்ணம்
விண்தோன்றும் வில்லாக
***விளங்குகின்ற பலவண்ணம்
வண்ணத்தில் வனைந்திடுவேன்
***வஞ்சியவள் பேரழகே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment