Tuesday, March 27, 2018

நடந்தாய் வாழி காவேரி ...!!!


குடகில் பிறந்து தவழ்ந்துவந்து 
***கொள்ளை யழகாய்க் கரைபுரண்டு 
மடங்கிச் செல்லும் வழியெங்கும் 
***மயங்க வைக்கும் கவின்நதியாய் 
அடவி செழிப்பில்  மலர்ந்தபடி 
***அலைகள் கொஞ்சி விளையாட 
நடந்தாய் வாழி  காவேரி 
***நலமே விளைவித் தாய்நீயே !

தென்றல் குளிர்ந்து தாலாட்ட 
***திங்கள் ஒளியில் பொன்னாயுன்
மின்னும் எழிலைப் பருகுதற்கு 
***விழிக ளிரண்டு போதாதே !
உன்னைக் கண்ட மாத்திரத்தில் 
***உவகை யுடனே கவிபிறக்கும் !
நின்னை வணங்கும் கன்னியரின்
***நெஞ்சம் மகிழ வைத்தாயே !

போகும் பாதை எங்குமன்று 
***புனித மாக்கிச் சென்றிருந்தாய் !
தாகம் தீர்க்க ஏன்மறந்தாய் 
***தமிழர் குரலைக் கேளாயோ ?
பாகு பாடே இல்லாமல் 
***பாய்ந்து வரவே விழைகின்றோம் !
வேக மாகத் தடைதாண்டி 
***விரைந்து நீயும் வருவாயே ..!!!

( மா மா காய் )

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment