குடகில் பிறந்து தவழ்ந்துவந்து
***கொள்ளை யழகாய்க் கரைபுரண்டு
மடங்கிச் செல்லும் வழியெங்கும்
***மயங்க வைக்கும் கவின்நதியாய்
அடவி செழிப்பில் மலர்ந்தபடி
***அலைகள் கொஞ்சி விளையாட
நடந்தாய் வாழி காவேரி
***நலமே விளைவித் தாய்நீயே !
தென்றல் குளிர்ந்து தாலாட்ட
***திங்கள் ஒளியில் பொன்னாயுன்
மின்னும் எழிலைப் பருகுதற்கு
***விழிக ளிரண்டு போதாதே !
உன்னைக் கண்ட மாத்திரத்தில்
***உவகை யுடனே கவிபிறக்கும் !
நின்னை வணங்கும் கன்னியரின்
***நெஞ்சம் மகிழ வைத்தாயே !
போகும் பாதை எங்குமன்று
***புனித மாக்கிச் சென்றிருந்தாய் !
தாகம் தீர்க்க ஏன்மறந்தாய்
***தமிழர் குரலைக் கேளாயோ ?
பாகு பாடே இல்லாமல்
***பாய்ந்து வரவே விழைகின்றோம் !
வேக மாகத் தடைதாண்டி
***விரைந்து நீயும் வருவாயே ..!!!
( மா மா காய் )
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment