Tuesday, May 19, 2015

கிராமத்துக் காதல் !


கார் கூந்தல் காற்றிலாட 
கயல் விழியும் அசைந்தோட 
சின்ன இடை வளைந்தாட 
கை வளையும் கலகலக்க 
கால் கொலுசு ஒலியெழுப்ப 
வயலோர வரப்பு மேலே 
வண்ண மயில் பெண்ணொருத்தி 
ஒய்யார நடை பயில .... 

வெள்ளயில வேட்டி கட்டி 
தொடைதெரிய மடிச்சு கட்டி 
தோளச்சுற்றி துண்டு போர்த்தி 
முறுக்கு மீசை வச்சுக்கிட்டு 
கட்டழகு காளை அவன் 
வாய்க்காலில் நீந்தி ஆட 
வயலோர வழி தனிலே 
நேரெதிரே நடந்து வர ..... 

குறுக லான வரப்பினிலே 
வழிவிட்டு இவள் விலக 
காலிடரி வயலில் விழ 
காளையவன் கரம் நீட்ட 
கைபிடித்து எழுந்த பெண்ணும் 
நாணத்தால் சிவந்து நிற்க 
அவளழகை அள்ளிப் பருகி 
ஆனந்தம் அவன் அடைய ...... 

தவழ்ந்துவந்த தென்றல் காற்றும் 
சிலிர்த்தமனதில் சில்லென்று வீசி 
இதயம் தடவி வருடிவிட 
மரம் உதிர்த்த பூக்களுமே 
மங்களமாய் வாழ்த் துரைக்க 
மனங்க ளிரண்டும் ஒன்றாகி 
கண்கள் கலந்து உறவாட 
மலர்ந்தது கிராமத்து காதல் ......!!

No comments:

Post a Comment