Sunday, May 24, 2015

புத்தக மூட்டையின் புலம்பல் ....!!!

ஏற்றிவிட்ட ஏடென்னை ஏறெடுத்தும் பாராமல் 
சீற்றமுடன் சீண்டாமல் செல்கின்றீர்- தேற்றிட 
யாருமின்றி மூட்டைக்குள் ஏங்கிக் கிடக்கின்றேன் 
கோருகிறேன் என்துயர் கொல் . 

உண்ணும்போ தும்நீர் உறங்கிடும் போதிலும் 
நண்பன்போல் என்னை நடத்தினீர் - கண்ணிமைப்போல் 
காத்திட்டீர், இப்போதென் கைங்கர்யம் வேண்டாமோ 
ஆத்தாடி! என்னே,நும் அன்பு . 

கணினிமய மானப்பின் கட்டிவிட்டீர் மூட்டை 
திணித்ததுடன் விற்றிடவும் திட்டம் - மணியாய் 
இணையமுடன் கைகுலுக்கி இன்பமுடன் சென்றீர் 
துணைவருவேன் என்றும் தொடர்ந்து .

புத்தக மூட்டையென்ன  பூமிக்குப் பாரமோ 
சத்தமின் றிச்சொல்வீர் சான்றோரே - உத்தமராய் 
ஆக்கிய தற்கிதுவே அன்பளிப்போ? துக்கமும்   
ஏக்கமும் வாட்டுதே இன்று ! 

No comments:

Post a Comment