Monday, May 18, 2015

வசமாகும் வானம் ...!!



ஒற்றைக்கால் இல்லையென 
****ஒருநாளும் சோர்ந்ததில்லை 
அற்றைக்கிரை தேடுதற்கு 
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !
பெற்றமகன் துணையிருக்க 
****பெருமகிழ்வு கூடிடுதே 
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !
உற்றதுணை யாயெனக்கு 
****உதவுமிரு ஊன்றுகோலே 
பற்றற்ற வாழ்க்கையிதே 
****பழக்கமாக ஆயிற்றே !
கற்காத காரணத்தால் 
****கவலையென்னை வாட்டுவதால் 
கற்பிப்பேன் பிள்ளைக்கு 
****கடமையது எந்தனுக்கு !
குற்றுயிராய்க் கிடந்தாலும் 
****குனிவுவர விடமாட்டேன் 
நற்பேரும் நானெடுப்பேன் 
****நன்மைகளும் செய்திடுவேன் !
சுற்றியுள்ள பசும்வயலும் 
****சுவர்க்கம்தான் எங்களுக்கு 
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!



இந்த வாரம் வல்லமையில் சிறந்த கவிஞர் என்ற பாராட்டு பெற்றுத் தந்த கவிதை 

No comments:

Post a Comment