Saturday, May 23, 2015

அன்னமே நீ சம்மதிச்சா ....!!!


                   



 அத்தமவளே அன்னக்கிளி 
அத்தானென்னப் புடிக்கலையா 
அன்பாசுத்தி வந்தாலும் 
அதட்டிதெனம் வெரட்டுறியே ! 

அட்டக்கருப்பா இருந்தாலும் 
அம்சமாதான நானிருக்கேன் 
அறிவெனக்கு மட்டுன்னாலும் 
அழகிலென்ன கொறச்சல்கண்ட ! 

அரிவாமீச புடிக்கலையா 
அளவுகொஞ்சம் கொறச்சுக்குறேன் 
அக்குள்வாடப் புடிக்கலையா 
அரப்புதேச்சி குளிச்சிவாறேன் ! 

அடுப்பூதப் பழகித்தாறேன் 
அரிசிச்சோறு ஆக்கித்தாறேன் 
அயரமீனு வாங்கிவாறேன் 
அரிஞ்சிக்கொழம்பும் வச்சிதாறேன் ! 

அந்தமூணு நாளுவந்தா 
அக்கறையாப் பாத்துக்குவேன் 
அலுப்பாநீ இருந்தாக்கா 
அமுக்கிடுவேன் காலுகைய ! 

அந்திசாயும் நேரத்துலே 
அல்வாமல்லி வாங்கிவாறேன் 
அசடுன்னு நெனச்சியென்ன 
அசட்டநீ செய்யாதே ! 

அடிக்கரும்பா இனிக்குறியே 
அடிவானமா செவக்குறியே 
அடிக்கடிமுகம் வெட்டுறியே 
அப்பளமாமனச நொறுக்குறியே ! 

அர்த்தசாமக் கனவில்வந்து 
அன்னாடம் படுத்துறியே 
அற்பமாயென்ன எண்ணாத 
அரவணச்சி வச்சிக்குவேன் ! 

அய்யனாரு கோயிலில 
அலகுபோட நேந்துக்கிட்டேன் 
அன்னமேநீ சம்மதிச்சா 
அடுத்தநிமிஷம் கட்டிக்குவேன் ....!!!

No comments:

Post a Comment