Saturday, May 23, 2015

பூக்களோடு ஒரு கைகுலுக்கல் ....!!



ஆகாயப்பூக்களே தரையிறங்கி வாருங்கள் 
வானத்து வீதியிலே உம்மை 
வாங்குவார் இல்லையோ ....?? 

மேகப்பஞ்சை நூலாய் திரித்து 
நட்சத்திரங்களை சரமாய்த் தொடுத்து 
நிறைமதிப் பெண்ணும் 
சூடலையா ?? 

வைகறைவேளையில் செங்கதிரோனும் 
கரங்கள்நீட்டி சரமதைவாங்கி 
முழுமதி கழுத்தில் மாலை போடலையா ?? 

வாசமில்லா பூக்களே நீவிர் 
யாரையும் வசியம் செய்யலையா ?? 

மண்ணிற்கு வந்தால் 
மங்கையர் கொய்து 
பின்னல்சடையில் 
சூடிக்கொள்வார் ! 

வெள்ளிப் பூக்களை 
மாலையாக்கி 
கோயில்சிலைக்கும் 
போட்டிடுவார் ...! 

ஒளிரும் மாலையில் 
கடவுளும் கண்ணுக்கு 
ஜெகஜோதியாய் தரிசனம் 
தந்திடுவார் ...!! 

தரைக்கு வந்தால் 
தங்கக் குழந்தைகள் 
கைகளில் குலுக்கி 
ஆடிடுவார் ....!! 

சிறுவர்கள் பார்த்தால் 
ஸ்டிக்கர் போலுனை 
வேண்டிய இடத்தில் 
ஒட்டிக்கொள்வார் !! 

கவிஞர் பாக்களில் 
மின்னிடும் பூக்களே 
புவிக்கு வரவழி 
தெரியலையா ?? 

அவசரப்பட்டு குதித்துவிடாதீர் ! 
ஆசையிருந்தால் மழைத்துளிகளிலே 
ஆளுக்கொருவராய் தொற்றிக்கொள்வீர் ! 
துளிகளும்மை பத்திரமாக 
தரையினில் இறக்கிவிட்டிடுமே ....! 

விண்ணின்பூக்களே !! 
மண்ணிற்கு வந்ததும் 
சந்தோஷமாக கைக்குலுக்கலாம் ....!! 

No comments:

Post a Comment