Saturday, May 23, 2015

யாருமில்லாத் தீவில் நான் .....!!!



தரங்கம் சூழ் தீவினிலே 
தனியாக நான் மட்டும் ...... 
தனிமை இனிமை சேர்க்குமா 
தவிப் பெனக்குள் பிறக்குமா ...?? 

நீலவான்மேற் பார்வையிலே 
நீலக்கடலில் அலையாடும் 
மேலெழும்பிக் கீழிறங்கி 
மேனிநனைத்து விளையாடும் ...!! 

ஆர்ப்பரித்து வந்தாலும் 
அருகில்வர அடங்கிவிடும் 
கரையோரம் பாதம்நனைத்து 
நுரைமுத்தம் தந்துசெல்லும் ....!! 

சுழன்றடிக்கும் கடற்காற்றும் 
சுகமாக வருடிவிடும் 
சொக்கிவிட்ட என்மனமும் 
சொர்க்கமாய் அதைநினைக்கும் .....!! 

மணற்திட்டின் மேலேறி 
நாற்புரம்விழி சுழற்றினேன் 
அற்புதத்தீவின் அழகினிலே 
என்னைநான் மறந்திட்டேன் ...!! 

முகந்துடைக்க வானத்து 
முகிற்துண்டை எடுத்திடவே 
முயற்சித்து கையுயர்த்தி 
முடியாது விட்டுவிட்டேன் ....!! 

தொடுவானம் தொலைவில்கண்டேன் 
தொட்டுவிட ஆர்வங்கொண்டேன் 
நெய்தல்நிலத் தெய்வத்தை 
நெடுவழிக்குத் துணைக்கழைத்தேன் ....!! 

பகலவனும் மேல்திசையில் 
பையபைய கடலுள்சென்றான் 
மெல்லமெல்ல வெளிச்சம்மங்கி 
இருள்சூழத் தொடங்கியதே ....!! 

அலைகடலின் பேரிரைச்சல் 
அடர்வனத்தின் அமானுஷ்யம் 
அடிவயிற்றைப் பிரட்டியதே 
அச்சம் என்னுள் உறைந்ததே ....!! 

இயற்கைரசித்த விழியிரண்டும் 
இருள்கண்டு மருண்டதுவே 
இதயத்துடிப்பு படபடவென 
இருமடங்காய் எகிறியதே ...!! 

யாருமில்லா தீவில்நான் 
யாசித்தேன் கடவுளிடம் 
கனவில்கூட தனிமையிலே 
கணநேரம் இருக்கவிடாதே ....!!!

No comments:

Post a Comment