Tuesday, May 12, 2015

பாசமுள்ள பாட்டிக்கு ...!! (படத்திற்கு ஒரு கவிதை )



காவிரி ஆற்றோரம் கைப்பிடித்துப் போட்டநடை 
பாவியென் நெஞ்சைப் படுத்திடுதே ! - ஓவியமாய்ச் 
செல்லும் நதியலையே! சீக்கிரமா யென்நிலைமை 
சொல்லிடுவாய் பாட்டியிடம் சோர்ந்து . 

அந்நாள் நினைவுகள் ஆர்ப்பரித்து வந்திடுதே 
எந்நாள் இனிக்காண்பேன் என்பாட்டி? - சிந்திட்டக் 
கண்ணீரும் காற்றினில் காய்ந்துலர்ந்துப் போயிற்றே 
மண்பிரிந்தாய் என்னை மறந்து . 

தாயாகித் தந்தையுமாய்த் தாங்கி வளர்த்தவளே 
மாயாவி போல்மறைந்த மாயமென்ன? ஓயாமல் 
பாடுபட்டப் பாசப் பறவையே எங்குனைத் 
தேடுவேன் பித்தந் தெளிந்து . 

மேற்கல்வி கற்றுநீ மேன்மையுற வேண்டுமெனப் 
போற்றி வழியனுப்பிப் போனாயே !- கூற்றுவனுக் 
கென்ன அவசரமோ கேளாமல் கூப்பிட்டான் 
என்செய்வேன் நீயின்றி யான் ? 

வாசிக்கத் தந்த வயலின் அழுகிறதே 
நேசித்த சொந்தமும் நீயென்றே! - ஆசிகள் 
வேண்டித் தவமிருப்பேன் விண்ணி லிருந்தாலும் 
தூண்போல் சுமப்பாய்த் தொடர்ந்து . 

வாட்டும் குளிரிலும் வாடா நினைவுகளால் 
பாட்டியுன் நற்பெருமைப் பாடிடுவேன் - சூட்டிடுவேன் 
வெண்பாப் புகழாரம் விண்ணெட்டக் கேட்டவுடன் 
வெண்ணிலவாய் வந்தென்னை வாழ்த்து !

No comments:

Post a Comment