வள்ளி திருப்புகழ்
*******************
தான தனதன தான தனதன
தான தனதன தனதானா ( அரையடிக்கு )
தோகை யிளமயி லேறி வலம்வரு
தூய வடிவனின் வலமாய்நீ
தோடு செவிகளி லாட மரையொடு
தோளொ டழகனை யணைவாயே
பாகு கனிமொழி யாளு னிதயமும்
பாச மிகுதியில் நனையாதோ
பாத மலரடி நாடி யுனதிரு
பார்வை படுமிடம் படர்வேனே
தேக வெழிலொடு வேல னுடனிணை
தேவி முகமது மொளிவீசும்
தேடு விழிகளில் நாணு மிமையொடு
தேவை யெதுவென வுளம்பேசும்
மேக வலைகளி னூடு நடமிடு
வேல னொடுவரு குறமாதே
வேடர் மடமக ளேவு னுறவிடம்
வீடு மருளிட மொழிவாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment