முருகனரு ளால்கிடைத்த முத்துப் புகழாம்
அருணகிரி நாத ரளித்தப் - பெருமைமிகு
தெள்ளுதமிழ்ப் பாட்டாம் திருப்புகழ் கேட்டிட
உள்ளத்திற் கஃதே உயர்வு .
தத்தித் தவழ்ந்துவரும் தங்க நிலவென
சொத்தாய் விளங்கும் சுகமதுவே ! - தித்திக்கக்
கள்ளமிலாப் பேச்சால் கவரும் மழலைகண்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு .
பக்தியுடன் தேவியைப் பாடித் துதித்திட
சக்தியவள் போக்கிடுவாள் சஞ்சலத்தை! - நெக்குருகி .
வெள்ளைக் கிழமை விரத மிருந்திட
உள்ளத்திற் கஃதே உயர்வு .
மல்லிகைப் பூவும் மனத்தை மயக்கிடும்
முல்லை விரியுமே முன்னிரவில் - இல்லத்தில்
முள்ளில் மலர்ந்திடினும் மொட்டுடன்ரோ சாமணக்க
உள்ளத்திற் கஃதே உயர்வு .
வளைந்தோடும் ஆற்றின் வழியெங்கும் செந்நெல்
விளைந்திடும், தென்றலும் வீசத் - திளைத்திடும்
வெள்ளறுவித் துள்ளி விழுவதைக் கண்டிடில்
உள்ளத்திற் கஃதே உயர்வு .
No comments:
Post a Comment