Wednesday, November 9, 2016

உள்ளத்திற் கஃதே உயர்வு .....!!!

முருகனரு ளால்கிடைத்த முத்துப் புகழாம் 
அருணகிரி நாத ரளித்தப் - பெருமைமிகு 
தெள்ளுதமிழ்ப் பாட்டாம் திருப்புகழ் கேட்டிட 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

தத்தித் தவழ்ந்துவரும் தங்க நிலவென 
சொத்தாய் விளங்கும் சுகமதுவே ! - தித்திக்கக் 
கள்ளமிலாப் பேச்சால் கவரும் மழலைகண்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு .

பக்தியுடன் தேவியைப் பாடித் துதித்திட 
சக்தியவள் போக்கிடுவாள் சஞ்சலத்தை! - நெக்குருகி .
வெள்ளைக் கிழமை விரத மிருந்திட 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

மல்லிகைப் பூவும் மனத்தை மயக்கிடும் 
முல்லை விரியுமே முன்னிரவில் - இல்லத்தில் 
முள்ளில் மலர்ந்திடினும் மொட்டுடன்ரோ சாமணக்க 
உள்ளத்திற் கஃதே உயர்வு .

வளைந்தோடும் ஆற்றின் வழியெங்கும் செந்நெல் 
விளைந்திடும், தென்றலும் வீசத் - திளைத்திடும் 
வெள்ளறுவித் துள்ளி விழுவதைக் கண்டிடில் 
உள்ளத்திற் கஃதே உயர்வு . 

No comments:

Post a Comment