Thursday, November 17, 2016

விண்ணுலகம் போற்றும் வியந்து ....!!!

கண்ணுக்குக் கண்ணாகக் காப்பவள் பெற்றவளே 
பெண்ணவளின் அன்பே பெரும்பேறாம்! -உண்டோசொல் 
மண்ணுலகில் தாய்க்கீடு? வையகமும் வாழ்த்திட 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

கண்ணே கனிமொழியே கற்கண்டே தெள்ளமுதே 
வெண்மதியும் தோற்றிடும் விந்தைநீ - வண்ணமிகு 
பெண்ணே,நம் காதலைப் பேணிடும் பேரழகை 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

கண்டாங்கிச் சேலைகட்டி கார்குழலில் பூச்சூடி 
கண்களிலே மைதீட்டக் காண்போரின் - கண்படுமே! 
வெண்சுடரும் எட்டி விழிவிரித்துப் பார்த்திட 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

பண்பாடு காத்துப் பலகலைகள் போற்றிடுவார் 
நுண்மையுடன் கற்றிடுவார் நூற்பாவும் !- பண்புடன் 
எண்ணற்ற வித்தைகற்ற ஈடில்லாப் பாவலரை 
விண்ணுலகம் போற்றும் வியந்து . 

புண்பட்ட நெஞ்சைப் புரிந்துதவி செய்திடும் 
நண்பனைப் போலுண்டோ நல்லுறவு? - மண்ணுலகில் 
திண்ணிய உள்ளமுடன் சீராட்டும் நட்புதனை 
விண்ணுலகம் போற்றும் வியந்து .

No comments:

Post a Comment