Thursday, November 17, 2016

மனம்மயக்க வருவாயா ...???

காத்திருந்த நேரமெல்லாம் கண்ணனுனைக் காணாமல் 
பூத்தவிழி சோர்ந்துவிட புன்னகையும் மறந்ததடா !
சாத்திவிட்ட மனக்கதவைத் தட்டியெழுப்பி அணைப்பாயோ ?
ஆத்தாடி ! என்செய்வேன் ஐம்புலனும் தவிக்குதடா !

நித்தமுன்றன் நினைவாலே நெஞ்சமெல்லாம் கொதிக்குதடா 
நித்திரையும் மறந்ததடா! நெக்குருக மாட்டாயோ ?
சுத்தமனத் தொடுன்னைச் சுற்றிவரு மென்னைநீ 
பித்தாக்கி விடுவாயோ ? பிழையென்ன கண்டாய்சொல் !

தென்றலெனைச் சுட்டிடுதே செந்தேனும் புளித்திடுதே 
கன்னலதும்  கசந்திடுதே காதலுளம் கசிந்திடுதே 
சின்னயிடைத் துவண்டிடுதே செவ்விதழும் உலர்ந்திடுதே 
மன்னவனே வந்திடடா மனமுருக வேண்டுகிறேன் !

கால்கடுக்க நிற்கின்றேன் காத்திருப்பு கொடுமையடா 
சேல்விழியும் கலங்குதடா சீக்கிரமே வந்திடடா !
பால்முகமும் வாடுதடா பாவையெனைப் பார்த்திடடா 
மால்வண்ணா! குழலூதி மனம்மயக்க வருவாயா ....?

No comments:

Post a Comment