நிலவுடன் நானும் தோழமை யோடு
****நினைவுகள் யாவையும் பகிர்ந்தேன் !
மலர்ந்தவள் வானில் வந்திடும் தருணம்
****மகிழ்வுடன் நெஞ்சமும் குளிர்ந்தேன் !
உலகமே வியக்கும் வெண்ணில வவளை
****உரிமையாய் உறவெனக் கொண்டேன் !
பலகணி வழியே பாத்தவ ளழகைப்
****பருகியே கவிதையும் வனைந்தேன் !
மயக்கிடும் அந்திப் பொழுதினில் மெல்ல
****மதிமுகம் கண்டதும் சிலிர்த்தேன் !
வியப்புறும் வண்ணம் வடிவினைக் கண்டு
****விடிந்திடும் வரையிலும் விழித்தேன் !
நயம்பட நாளும் நடந்ததைச் சொல்லி
****நலமுடன் நட்பினை வளர்த்தேன் !
இயற்கையின் எழிலை அனுதினம் ரசித்தே
****இறைவனை வந்தனை செய்தேன் !
முகிலினுள் ஒளிந்து முகத்திரை போட்டு
****முழுவதும் மறைந்ததில் துடித்தேன் !
சகியவள் வெளியே வந்ததும் தானே
****தனிமையில் புன்னகை புரிந்தேன் !
நெகிழ்வுடன் பேசி நிழலெனத் தொடரும்
****நிலவுடன் உள்ளமும் கலந்தேன் !
பகிர்ந்திட ஆசை கொண்டத னாலே
****பழகிய சுகந்தனை வடித்தேன் !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment