Wednesday, November 30, 2016

என்னுயிர் நீதானே ....!!!

உன்னையே எண்ணினேன் நீலவண்ணா 
****உலகமே நீயென வாழ்ந்திருந்தேன் !
அன்பினால் இறைஞ்சினேன் கழல்பணிந்து 
****அருகினில் நீவர ஏங்கிநின்றேன் !
இன்பமோ துன்பமோ  எதுவரினும் 
****இனியவன் உன்னுடன் ஏற்றிடுவேன் !
மின்னலாய் மறைந்தது மேன்கண்ணா ?
****விரைந்திடு என்னுயிர் துடிக்குதடா !

மூடிய திரைதனை நீக்கிவிடு 
****முன்பனி வாட்டுமுன் வந்துவிடு !
தோடியில் பாடினேன் கேட்கலையோ
****தோகையென் இன்குரல் ஈர்க்கலையோ ?
தேடினேன் நதிக்கரை வழியெங்கும் 
****தேகமும் அசதியில் சோர்ந்ததடா !
வாடிய பயிரென வதங்கிவிட்டேன் 
****மாயனே மயக்கிட வாராயோ ?

கோதையின் நெஞ்சமும் அறியாயோ 
****கோபியர் கொஞ்சிடக் களித்தாயோ ?
கீதையின் நாயகா கெஞ்சுகிறேன் 
****கீதமுன் காதிலே கேட்கலையோ ?
பாதையில் பார்வையைப் பதித்தேனே 
****பாவியென் நிலையினைப் பாராயோ ?
பேதையைத் தவித்திட வைப்பாயோ 
****பேறென அணைத்துக் கொள்வாயோ ?

ஊதிடும் குழலிசை கேளாமல் 
****ஊனமாய் ஆனதே என்னிதயம் !
சேதியை யாரிடம் சொல்லுவதோ 
****சேடியும் இவ்விடம் காணலையே !
சோதியில் நின்முகம்  தெரிந்ததடா 
****சொர்க்கமாய்க் காட்சியும் இனித்ததடா !
காதிலுன் நாமமே ஒலிக்குதடா 
****கண்ணனே என்னுயிர் நீதானே !



No comments:

Post a Comment