கால்வலிக்கக் காத்திருந்தேன் கண்ணாநீ வருவாயா
பால்முகத்தைக் காணாமல் பாவைவிழி பூத்திருந்தேன்
சால்புடனே உன்புகழைத் தவிப்புடனே பாடுகின்றேன்
வேல்விழியும் சோர்ந்ததடா வேடிக்கை போதுமடா !
நதிக்கரையின் ஓரத்தில் நாதனுனை நினைக்கின்றேன்
கதிநீயே என்றுன்னைக் காதலினால் தேடுகின்றேன்
குதிபோடு மென்னிதயம் குழலோசை கேட்டுவிட்டால்
கொதிக்கின்ற நெஞ்சத்தைக் குளிர்விக்க வருவாயா ?
கார்மேக வண்ணாவுன் கட்டழகில் மயங்கிவிட்டேன்
மார்போடு சேர்த்திடவே மாதவனே வந்திடடா
சீர்மிகவே குழலூதி சீக்கிரமே வந்துவிடு
தேர்போலுன் கம்பீரத் திருநடனக் காட்சிகொடு !
இளந்தென்றல் தாலாட்டில் எனைமறந்தே கண்ணயர்ந்தேன்
களையான கள்வனைநான் கனவினிலே கண்டுகொண்டேன்
உளமார்ந்த நேசமுடன் உறவாடி மகிழ்ந்திருந்தேன்
விளங்குமெழில் கண்ணனுடன் விளையாடிக் களித்திருந்தேன் !
எண்ணமெல்லாம் அவனினிக்க என்பசியை மறந்திருந்தேன்
வண்ணமலர்ப் பூச்சூடி வளையவந்தேன் அவனுடனே
கொண்டாடிக் களித்தேனே கோகுலத்தில் மன்னனுடன்
கண்ணனுடன் இணைந்துவிட்டேன் கனவேநீ கலையாதே ....!!!
No comments:
Post a Comment