Thursday, November 10, 2016

கனவே கலையாதே ....!!!



கால்வலிக்கக் காத்திருந்தேன் கண்ணாநீ வருவாயா
பால்முகத்தைக் காணாமல் பாவைவிழி பூத்திருந்தேன் 
சால்புடனே உன்புகழைத் தவிப்புடனே பாடுகின்றேன் 
வேல்விழியும் சோர்ந்ததடா வேடிக்கை போதுமடா !

நதிக்கரையின் ஓரத்தில் நாதனுனை நினைக்கின்றேன் 
கதிநீயே என்றுன்னைக் காதலினால் தேடுகின்றேன் 
குதிபோடு மென்னிதயம் குழலோசை கேட்டுவிட்டால்
கொதிக்கின்ற நெஞ்சத்தைக் குளிர்விக்க வருவாயா ?

கார்மேக வண்ணாவுன் கட்டழகில் மயங்கிவிட்டேன் 
மார்போடு சேர்த்திடவே மாதவனே வந்திடடா 
சீர்மிகவே குழலூதி சீக்கிரமே வந்துவிடு 
தேர்போலுன் கம்பீரத் திருநடனக் காட்சிகொடு !

இளந்தென்றல் தாலாட்டில் எனைமறந்தே கண்ணயர்ந்தேன் 
களையான கள்வனைநான் கனவினிலே கண்டுகொண்டேன் 
உளமார்ந்த நேசமுடன் உறவாடி மகிழ்ந்திருந்தேன் 
விளங்குமெழில் கண்ணனுடன் விளையாடிக் களித்திருந்தேன் !

எண்ணமெல்லாம் அவனினிக்க என்பசியை மறந்திருந்தேன் 
வண்ணமலர்ப் பூச்சூடி  வளையவந்தேன் அவனுடனே 
கொண்டாடிக் களித்தேனே கோகுலத்தில் மன்னனுடன் 
கண்ணனுடன் இணைந்துவிட்டேன் கனவேநீ கலையாதே ....!!!

No comments:

Post a Comment