Tuesday, November 29, 2016

நதிக்கரை ஞாபகங்கள் ....!!!


வளைந்துசெலும் வழியெங்கும் வளத்தைக் கூட்டும் 
****வனப்பினிலே அகங்குளிர வதனம் பூக்கும் ! 
களைப்பகற்றத் தென்றலுடன் கலந்து வந்து 
****காலடியை முத்தமிட்டுக் காதல் சொல்லும் ! 
திளைத்தமனம் புத்துணர்வால் தெளிவைப் பெற்றுச் 
****செயலாற்ற நாள்முழுதும் சிறப்பாய்ச் செல்லும் ! 
விளைந்திருக்கும் நெற்கதிர்கள் வெட்கம் மின்ன 
****விருப்பமுடன் தலையசைத்து நன்றி கூறும் ...!!! 

மதிவந்து முகம் பார்த்து மயங்கி நிற்க 
****மகிழ்வுடனே நதிநீரும் மையல் கொள்ளும் ! 
குதித்தோடிக் கயலுடனே குலவும் கெண்டை 
****கொஞ்சிவிளை யாடிடுமே கூடி ஒன்றாய் ! 
நதியோடு நினைவலையில் நனைந்து மூழ்க 
****நடந்ததெலாம் மனத்திரையில் நடன மாடும் ! 
புதிராகப் போயிற்றே புனலில் போக்கு 
****பொலிவிழந்தக் காரணத்தைப் புரட்டு முள்ளம் ...!!! 

செழிப்பான நதியெங்கே தேடிப் பார்க்கும் 
****சிறுவர்தம் மணல்வீடாய்ச் சிதைய லாச்சோ ? 
கழிவுகளால் சீர்கெட்டுக் கசடாய் மாறிக் 
****கருவேலம் படர்ந்துள்ளக் காடாய்க் கண்டோம் ! 
வழித்தெடுத்து மணற்கொள்ளை வகையாய்ச் செய்யும் 
****வஞ்சகரால் விவசாயி வாழ்வும் மங்கும் ! 
அழிந்துவரும் நதிவளத்தை அரசும் காத்து 
****அனைத்துநலத் திட்டங்களும் அளித்தால் நன்றே ...!!! 

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

No comments:

Post a Comment