பூரிப்பில் நெஞ்சமது புதுராகம் பாட
***பொங்கிவரும் நினைவுகளில் புதுவெள்ளம் பாய
பாரிலுயர் பைந்தமிழில் பாட்டெழுதிப் பாட
***பாவைமுகம் உவகையினால் பவளமென மாற
வாரியின்பம் பெற்றவளின் வாழ்க்கைமனம் வீச
***வாடாத மல்லிகையாய் மனம்குளிர்ந்தே கூட
பேரிடியும் விழுந்ததுவே பெண்ணவளின் வாழ்வில்
***பேரிழப்பில் துடிதுடித்தாள் பேதையவள் நொந்தே !
கண்போலக் காத்திருந்தக் கணவனுயிர் போக
***கள்ளமிலா மங்கையவள் கதறியழக் கண்டு
விண்ணுலகும் கண்ணீரை மேதினியில் சிந்த
***விழிநீரும் வழிந்திடவே மெல்லிடையாள் துஞ்ச
உண்ணாமல் உறங்காமல் உருக்குலைந்து போனாள்
***உள்ளூரும் அவன்நினைவால் உள்ளமது வெந்தாள்
திண்டாடும் அவலநிலை தேங்கியதால் நெஞ்சம்
***தெளிவற்றுக் கிடந்தாளே தேம்பியழு தாளே !
கூட்டுக்குள் வாழ்ந்தவனைக் கூற்று,பழி வாங்க
***கோலமயில் துவண்டாளே கூடலின்ப மின்றி
ஆட்டுவிக்கு ஆண்டவனே அளித்திடுவாய் தீர்வை
***அடுக்கிவரும் துன்பத்தில் அலைக்கழிக்க லாமோ
மீட்டாத வீணையிலே மீண்டிடுமோ நாதம்
***மீட்டலிலாப் பெண்மையதும் மெருகிழந்து போகும்
வீட்டுக்குள் முடங்கியவள் மீண்டுவரச் செய்ய
***மீட்டுகின்ற விரலாக வேண்டுமொரு துணையே !
No comments:
Post a Comment