Tuesday, April 28, 2020

அவையடக்கம் .... வண்ணப் பாடல் ...!!!


தன்னதன தானதன
தன்னதன தானதன
தன்னதன தானதன தனதானா ( அரையடிக்கு)
வண்ணமெழு மாவலொடு
கண்ணிமைகள் மூடவிலை
வன்னிகையு மோயவிலை விரலோடே
வன்மையொடு நானெழுத
மின்னிவரு பாடல்களை
மன்னுதலு மார்புரிவ ரறியேனே
சின்னவளெ னாசைகளும்
விண்ணளவி லேபெரிது
திண்மையுட னேமுடியு மிறையாலே
செம்மையொடு யான்தொடர
முன்னிலையி லேயுலவு
செம்மொழியு மானவளி னருளாலே
எண்ணியது போலெழுத
வன்னையவ ளால்முடியு
மென்னறிவு மேதுமிலை தெளிவீரே
இன்னலற நூறெழுத
நன்னடையி லேவனைய
என்னுளவளே நிறைய வருவாளே
தண்மையுட னேபயில
உண்மையொடு மாவரத
தன்னிகரி லாதகுரு வருளோடே
தன்னிலையி லேதவறை
மன்னியென வேயுருகு
தன்மையுட னேதயவு புரிவீரே !!
வன்னிகை - எழுதுகோல்
வன்மை - அழகு
தண்மை - எளிமை
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment