Thursday, April 16, 2020

ஊசல் வரி ...!!!

உள்ளம் கவர்ந்தவனை ஊர்மெச்சு முத்தமனைக்
கள்ளமிலாக் காதலனைக் கன்னல் மொழிபேசி
அள்ளி அணைப்பானை அன்பில் கசிந்துருகித்
துள்ளி மகிழ்வுடன் ஆடாமோ ஊசல்
சுகந்த மலர்சூடி ஆடாமோ ஊசல் !!
குழற்கற்றைக் காதோரம் கொஞ்சி யசைந்தாட
மழைச்சார லோடு மனம்நனைந் தாட
அழகன் வரும்வழியை ஆசையுடன் பார்த்து
விழிகளும் மின்னிட ஆடாமோ ஊசல்
விரைந்து வரப்பாடி ஆடாமோ ஊசல் !!
மீசை முறுக்குடன் வீர நடைபோட்டுப்
பாசம் பொழிந்திடப் பக்கம் வருவானை
ஓசையின்றி முத்தமிட்(டு) உள்ளமதைக் கொய்வானைப்
பேசி மணமுடிக்கப் பேராவ லோடெண்ணி
வீசும் வளியுடன் ஆடாமோ ஊசல்
விரும்பி வரவேற்க ஆடாமோ ஊசல் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment