Saturday, April 18, 2020

வண்ணப் பாடல் ...!!!

தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான     தனதானா  ( அரையடிக்கு )

படிக ளேறி மலைமீது 
கவலை யோடு வரும்போது 
பழனி பால கனைநாடு    மனமேநீ !

பரம ஞான மருள்வானை 
யுருகு மாறு கனிவோடு
பணிய வேம யிலிலேறி    வருவானே !

கொடியு மாட வரவாட 
விடைய றாத வளியோடு
குழலு மாட மலராடு      மழகோடே !

குருகு மாட மரமாட 
மணியு மாடு மொலியோடு
குமர னாட வடிவேலும்      நடமாடி !

அடிய ரோடு துணையாக 
மழலை போலு மொழிபேசி 
யருள வோடி யுறவாட     விழைவானே !

அழகு நாவல் மரமீது 
கிழவி யோடு கதைபேச
அருவி யாக வுளமாடி     நனையாதோ !

முடிவி லாத துயரோடு 
மனமும் வாடி யலையாது 
முருக னேயு னருளாசி     பொழியாயோ !

முதுமை நோயி லுழலாம
லுனது பாத மலராக
முறுவ லோடு கரைசேர     அருள்வாயே !!


சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment