Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!

வண்ணப் பாடல் ...!!!
***************************
தான தனதன தான தனதன 
தான தனதன    தனதானா ( அரையடிக்கு ) 

ஆதி சிவனுடன் நாண மிகநட 
மாடு முமையவள்    மகனாரை  
ஆசை யுடன்குற மாது தழுவிடும்
ஆறு முகமுடை    மணவாளா !

தேசு நிறைபவ ஞான வடிவொடு
தேவ மகளுட     னருள்வேளே
தேடு விழிகளில் நேய முடனொரு 
தீப தரிசன    மருள்வாயே !

நீதி நெறியினை நாளு மருளிட 
நீல மயினிலில்    விரைவோடே
நேரும் வினைகளும் மாறி விலகிட 
நீயும் பரிவொடு     வருவாயே !

வீதி வழிகளில் யாரு மிலையென 
வேல னுனதுளம்    நினையாதோ 
வேறு வழியற வாடு மனிதரும் 
மீள வரமது     புரிவாயே !!

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment