Saturday, April 18, 2020

ஆட்டம் ...!!!



வானில் கரிய மேகம் சூழ்ந்தால்
மண்ணில் மயிலாடும் !
வனத்தில் தத்தம் இணைக ளுடனே
மான்கள் சேர்ந்தாடும் !
தேன்நி லாவும் உலவும் முகிலின்
திரைக்குள் ஒளிந்தாடும் !
சீண்டிப் பார்க்கும் விண்மீன் கள்கண்
சிமிட்டி உறவாடும் !
கானில் விரிந்த மலர்க ளெல்லாம்
காற்றில் கலந்தாடும் !
கள்ளை யுண்ணப் பறந்து வந்து
களிப்பில் வண்டாடும் !
வானில் வளைந்த வான வில்லில்
வண்ணம் இசைந்தாடும் !
மழைக்கு முன்னே கொடிபோல் மின்னல்
மலர்ந்தே ஒளிர்ந்தாடும் !!
மரத்தின் கிளையில் தாவித் தாவி
மந்தி விளையாடும் !
மலையின் அருவி வழுக்கிக் குதித்து
மகிழ்வில் நனைந்தாடும் !
இரவில் திங்கள் ஒளியில் அல்லி
இதழ்கள் விரித்தாடும் !
இருளில் குளத்தில் ஒளிந்த மதியும்
இனிதே குளிர்ந்தாடும் !
குருவி சிறிய அலகால் இரையைக்
கொத்திக் குதித்தாடும் !
கொட்டும் மழையில் கிளைகள் குளித்துக்
குலுங்கி மகிழ்ந்தாடும் !
பொருநை நதியி னலையில் கயல்கள்
புரண்டு புரண்டாடும்!
புல்லின் நுனியில் துளிகள் திரண்டு
பொலிவாய் நின்றாடும் !!
செந்நெற் கதிர்கள் தலையைக் குனிந்து
சிலிர்ப்பில் வளைந்தாடும் !
சிவந்த மரையும் பரிதி கண்டு
சிரித்து மலர்ந்தாடும் !!
சொந்த மாகச் சொகுசாய் அமைத்த
சொர்க்க புரிபோலும்
தொங்கும் மஞ்சட் குருவிக் கூடு
சுகமாய் அசைந்தாடும் !
அந்திப் பொழுதின் மஞ்சள் வெயிலும்
அடங்கிச் சிவந்தாடும் !
அந்தக் கணத்தில் அடையும் கூட்டில்
அன்பு மிளிர்ந்தாடும் !
தொந்த மாக நதியில் நித்தம்
தோணி மிதந்தாடும் !
தூக்க மில்லாக் கடலின் அலைகள்
துள்ளி எழுந்தாடும் !
தென்றல் காற்று தழுவிக் கொள்ளத்
தென்னங் கீற்றாடும் !
சின்னக் கிளிகள் கொஞ்சும் பேச்சைக்
கேட்டுச் சிரித்தாடும் !
கன்னங் கரிய குயிலின் இசையைக்
காற்றும் சுவைத்தாடும் !
கன்னல் கரும்பின் அழகுத் தோகை
கண்ணைக் கவர்ந்தாடும் !
கொன்றை மலர்கள் மரத்தை மறைத்துக்
கொத்தாய்க் குவிந்தாடும் !
கோடை மழையில் நனைந்த நெஞ்சம்
குளிர்ந்து சிலிர்த்தாடும் !
அன்னம் இணையோ டிணைந்து மெல்ல
ஆற்றில் அசைந்தாடும் !
அன்றில் பறவை பிரியா தென்றும்
அன்பில் உறவாடும் !
இயற்கை ஆட்டம் ஓட்டம் எல்லாம்
இறைவன் அருளாகும் !
இயல்பை விட்டு மாறி னாலோ
இழப்பு பெரிதாகும் !
உயர்வு தந்து நலத்தைப் பெருக்கி
வுவகை யுந்தருமே !
உலகில் நாளும் புதிய ஆட்டம்
உலவும் புதுசுகமே !
துயரை வென்று மீட்டு வந்து
சுகத்தைத் தந்திடுமே !
சொந்த பந்தம் கூடி யாடச்
சோர்வும் விலகிடுமே !
அயர்ச்சி யின்றி வாழ்வை வெல்ல
ஆட்டம் அவசியமே !
அதுவும் எல்லை மீறிப் போனால்
அமைதி போய்விடுமே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment