Saturday, August 1, 2015

பாடும் பணியே பணியாய் அருள்வாய் ....!!




ஆல கண்டன் அருமைப் புதல்வா 
கோலக் குமரா குறத்தி மணாளா
சூல மேந்தித் துடிப்பாய் வருவாய்  
காலன் வருமுன் காப்பாய் முருகா !

சேவற் கொடியோய் செந்தில் வேலா 
பாவம் தீர்ப்பாய் பழனி வேலா 
ஆவல் கொண்டே அழைத்தேன் அழகா 
தேவ யானை தேவி நாதா !

விருத்தம் பாட விரைந்தே வாராய் 
வருத்தம் தீர வரமும் தாராய்
குருவாய் எந்தன் குறைகள் கேளாய் 
திருவாய் மலர்ந்தே தீர்ப்பைக் கூறாய் !

ஆடும் மயிலில் அமர்ந்தே வருவாய் 
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
ஈடு இணையே இல்லா தேவா 
வீடு பேற்றை வேண்டத் தருவாய் ! 

No comments:

Post a Comment