ஆல கண்டன் அருமைப் புதல்வா
கோலக் குமரா குறத்தி மணாளா
சூல மேந்தித் துடிப்பாய் வருவாய்
காலன் வருமுன் காப்பாய் முருகா !
சேவற் கொடியோய் செந்தில் வேலா
பாவம் தீர்ப்பாய் பழனி வேலா
ஆவல் கொண்டே அழைத்தேன் அழகா
தேவ யானை தேவி நாதா !
விருத்தம் பாட விரைந்தே வாராய்
வருத்தம் தீர வரமும் தாராய்
குருவாய் எந்தன் குறைகள் கேளாய்
திருவாய் மலர்ந்தே தீர்ப்பைக் கூறாய் !
ஆடும் மயிலில் அமர்ந்தே வருவாய்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
ஈடு இணையே இல்லா தேவா
வீடு பேற்றை வேண்டத் தருவாய் !
No comments:
Post a Comment