Saturday, November 25, 2017

எங்கோ இசைத்த பாடலிலே ....!!!



எங்கோ இசைத்த பாடலிலே 
      இதயம் அமைதி கொண்டதடி !
மங்கை யுன்றன் குரல்போலும் 
     மனதை மயங்க வைத்ததடி  !
வங்கக் கடலின் அலையொலியாய் 
     வசியம் செய்து சென்றதடி !
சங்கத் தமிழின் இனிமையைப்போல் 
     சந்தம் கொஞ்சி அணைத்ததடி  !

தனிமை வாட்டும் வேளையிலே 
     தாகந் தீர்க்கும் சுகவிருந்தாய் 
வனிதை உன்றன் தேன்குரலும் 
     வளைய வந்து மோதுதடி !
பனியாய் உருகச் செய்ததடி 
     பன்னீர் மணமாய் நிறையுதடி !
கனிவாய் நெஞ்சை வருடுதடி  
     காற்றில் மெல்லக் கலந்துவந்தே !

தேனை யுண்ட வண்டிசையோ
       தென்றல் பாடும் ராகமிதோ
மீனை யொத்த விழியுடையாள்
      மீட்டும் மதுர கானமிதோ
மோனை எதுகை நயத்தோடு
     முழங்கும் கவிதைப் பாச்சரமோ 
ஊனை யுருக்கி விட்டதடி 
     உள்ளம் உரசிக் கொன்றதடி !

யாழின் இசையும் தோற்குதடி 
      என்றன் நிலையை என்சொல்ல ?
சோழி உருட்டி விட்டாற்போல் 
     சொக்கிச் சிலிர்க்க வைத்ததடி !
தோழி! நீயென் அருகிருந்தால் 
     சோகம் யாவும் மறைந்துவிடும் !
வாழி என்று வாழ்த்திசைக்க 
     வருவாய் வண்ணக் கனவினிலே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment