ஒத்தையடிப் பாதையிலே
***ஒத்தையில போறவளே
பத்திரமா போய்வாடி
***பால்நிலவு வருமுன்னே !
அத்தமவன் நானிருக்கேன்
***அச்சத்த விரட்டிவிடு
சத்தியமாத் துணையிருப்பேன்
***சாகுமட்டும் உன்னுடனே !!
ஆத்தோரம் போகாதே
***அலைவந்து முத்தமிடும்
காத்துவந்து மேனிதொட்டுக்
***காதலுடன் கதைபேசும் !
வாத்துகளும் நீந்திவந்து
***வரவேற்கக் காத்திருக்கும்
சேத்துக்குள் தாமரையும்
***செவ்விதழால் சிரித்திடுமே !!
நாணமுடன் நீநடக்க
***நாத்துகளும் தலையசைக்கும்
நாணல்புல் கரையினிலே
***நளினமுடன் நடனமிடும் !
ஆணவத்த விட்டுவிட்டு
***அழகுமயில் ஆடிவரும்
வீணான பயமெதற்கு
***விரைந்துவாடி என்குயிலே !!
பட்டெடுத்து வந்துனக்குப்
***பரிசமிட நாள்பார்ப்பேன்
பொட்டுவச்சிப் பூமுடிச்சிப்
***புதுப்பெண்ணா உனைரசிப்பேன் !
கொட்டுமழை நாளினிலும்
***குடையின்றி நடந்துவந்து
கட்டிவெல்லத் தங்கமுனைக்
***கண்குளிரக் காண்பேனே !!
பூவனமும் உனைக்கண்டால்
***பூரிப்பில் குளிர்ந்துவிடும்
தேவதையே உன்னன்பில்
***சிக்குண்டுத் தவிக்கின்றேன் !
தாவணியில் மயக்குறியே
***தாகத்தைத் தூண்டுறியே
ஆவணிக்குள் தாலிகட்டி
***ஆசையுடன் அணைப்பேனே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment