Friday, November 24, 2017

செல்லத் தங்கமே ...!!!


பட்டுவண்ண ரோசாவே 
     பாசமுள்ள பைங்கிளியே !
சிட்டைப்போல் சிரிப்பினிலே 
     சித்திரமா சொலிப்பவளே !
சுட்டுவிரல் பிடித்தபடி 
     சுத்திவரும் சுந்தரியே !
மொட்டுவொண்ணு விரிந்தாற்போல் 
     முத்தத்தில் மலர்ந்தாயே !!

அப்பான்னு அழைக்கையிலே 
     ஆயிரம்பூ பூத்ததம்மா !
உப்புமூட்ட சுமந்தபடி 
    ஊர்சுத்திக் காட்டிடுவேன் !
சொப்புவச்சி விளையாடச் 
     சொல்லிநானும் தந்திடுவேன் !
எப்போதும் ஒன்நினைப்பே 
      இனிக்குதம்மா நெஞ்சினிலே !!

கால்கொலுசு சத்தத்தில்
      கண்முழிச்சிப் பாத்திடுவேன் !
பால்வாங்கி வந்துனக்குப்
     பக்குவமா கொடுத்திடுவேன் !
சேல்கெண்டை மீனாட்டம் 
     சேட்டையிலே துள்ளுறியே !
மேல்விழுந்து நீயாட 
     மேனியெல்லாம் சிலிர்க்குதம்மா !

ரெட்டசடை போட்டுவிட்டு 
     ரிப்பனையும் கட்டிவிட்டு 
சுட்டியுன்ன பாடசாலை 
    சுமந்துகொண்டு போவேனே !
அட்டைப்போல் ஒட்டியேநீ
     அடம்பிடித்தால் ஆகாதே !
கட்டிவெல்லத் தங்கமேநீ 
      கலங்காம செல்லமேபோ !!

சியாமளா ராஜசேகர்  

No comments:

Post a Comment