கதிர்வரவு கண்ட கமலம் விரிந்து
நதியலையி லாடும் நயந்து ! - செதில்கொண்ட
கெண்டைமீன் நுள்ளக் கிறங்கிய தாமரையும்
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து . 1.
சாய்ந்தாடும் தெங்கோலைத் தாலாட்டு கேட்டாற்போல்
வாய்க்கால் கரையில் வளைந்தபடிப் ! - பாய்ந்துவரும்
நீரில் முகங்கண்டு நேராய் நிமிர்ந்திடும்
பூரிப்பில் புன்னகைக்கும் பூத்து. 2.
பூத்திருக்குஞ் சோலையில் பொன்வண்(டு) இசைபாடிக்
காத்திருக்கும் ஆவலுடன் கள்ளுண்ணப் ! - பாத்திக்குள்
தேடிவந்து செம்மலரில் தேனுறிஞ்சி விட்டதுவும்
ஆடியே செல்லும் அழகு ! 3.
அழகிய மேகம் அணிதிரண்டு வந்து
பழகிய வெண்ணிலவைப் பார்க்கக் - குழவியாய்க்
கொஞ்சிச் சிரித்துக் குளிர்ச்சியாய்க் காய்ந்திடும்
நெஞ்சைக் கவரும் நிலவு . 4.
நிலவும் இரவினில் நித்திரை யின்றி
உலவிடும் வானில் உவப்பாய்க் ! - கலங்காக்
குளத்தினில் தானும் குளிக்க விரும்பிக்
களிப்புடன் முங்கும் கனிந்து. 5.
கனிவுடன் வந்துமெல்ல கால்வருடிச் செல்லும்
இனிமைசுகம் வேரெதிலு மில்லை - தனிமையாய்
நீலக் கடலினில் நீந்தும் அலைகளின்
கோலயெழில் கண்டிடக் கூடு . 6.
கூடிவரும் வான்முகிலும் கோலா கலமாக
நாடிவரும் வானவில்லை நாட்டமுடன் - தேடிவந்து
பார்த்துப் பரவசப் பட்டிருக்கும் காட்சியில்நம்
சோர்வகன்று கிட்டும் சுகம் . 7.
சுகமாய் மலைமேல் துயிலும் முகிலும்
மிகவும் அழகாய் விளங்கும் !- ககன
வெளியி லுலவிடும் வெண்பனி மேகம்
ஒளியாய்த் தெரியும் உணர் . 8.
உணர்ந்தால் இயற்கை உலகின் வரமே
இணக்க முடனே இயைந்தால்!- வணங்கிட
என்று மியற்கையால் ஏற்றம் கிடைத்திடும்
இன்ப மளிக்கும் இதம். 9.
இதமான தென்றல் இதயம் தழுவும்
மிதமான சாரல் விருந்தாய்ப் ! - பதமாய்
நனைக்கும் மழையில் நமதுளம் பூக்க
வனையும் கவிதை வரம் . 10.
No comments:
Post a Comment