Friday, November 24, 2017

வீரமங்கை வேலுநாச்சியார் ...!!!



வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கை யாண்ட 
***வீரமங்கை  வேலுநாச்சி யாரென்னும் ராணி! 
பேரழகுப் பெண்மயிலாள் இளம்வயதி லேயே
***பிறமொழிகள் பயின்றதுடன் இலக்கியமும் கற்றாள்!
பூரணமாய்ப் போர்க்கலைகள் பலவற்றில் தேர்ந்தாள்
***புலிபோலும் வீரத்திற் சிறந்தாளைக் கண்டு 
தீர(ன்)முத்து வடுகநாதன் காதலிலே மூழ்கித் 
***திருமணமும் செய்துகொண்டான் வேலுநாச்சி யாரை !

ஆங்கிலேயப் படையெடுப்பில் வஞ்சகமாய்க் கொன்ற 
***அன்பான தன்பதியின் இறந்தசெய்தி கேட்டுத்
தாங்கொணாத துயராலே உடன்கட்டை ஏறித் 
***தன்னுயிரை மாய்த்திடவே முடிவுசெய்தாள் அவளே !
வேங்கையென வெகுண்டெழுந்து பழிவாங்கச் சொன்ன 
***வீரமருது சகோதரர்கள் அமைச்சருடன் சேர்ந்து 
தீங்கிழைத்த எதிரிகளைத் தீர்த்திடவே எண்ணி 
***திண்டுக்கல் கோட்டைக்குப் பாதுகாப்பாய்ப் போனாள் !

ஆண்வேட மணிந்துசென்று  படையுதவி கேட்க 
***ஐதரலி படைகளையும் உடனனுப்பி வைத்தான் !
மூண்டெழுந்த போருக்காய் உயிர்த்தியாகம் செய்ய 
*** முனைந்திட்ட குயிலியுமை யாள்வீரம் பெரிதே !
மீண்டிடவே முடியாமல் எதிரிகளும் தோற்க 
***வெற்றிவாகை சூடிநின்ற தமிழச்சி தானும்
வேண்டியவர் தன்னிடத்தில் மண்டியிட்ட  தாலே
*** வீரமங்கை மன்னித்தாள்  உயிர்ப்பிச்சை தந்தே !!

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment