வண்ணப் பாடல் !!
*************************
சந்தக்குழிப்பு
*******************
தத்தன தனதன
தத்தன தனதன
தத்தன தனதன . . .தனதானா
சிட்டவ ளனுதின மச்சுத னருளொடு
செப்பிடு மொருகவி யுணராயோ?
சிற்றிடை வருடிடு நித்தில வணியொடு
சித்திர மெழுதிய ததுபோலே !
பட்டுடை யணிபவ ளற்புத வறிவொடு
பத்தினி யவள்மொழி இசையாகும் !
பட்டென வொளிர்பவள் நற்குண வதிநிதம்
பற்றறு நிலையினி லுழல்வாளோ !
வெட்கமு மணிசெய அத்தனை உரிமையில்
மெத்தையி லணைபவ ளுயிராக !
வித்தகி யவளது முத்திரை வழிதனில்
வெற்றியில் மகிழுவ ளழகாக !
மொட்டவிழ் முகையினை முட்டிடு வளியென
முத்திட இனியவள் வருவாளே !
முத்தமி ழமுதினை நித்தமும் பொழிபவள்
முக்கனி ரசமது தருவாளே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment