Thursday, July 4, 2019

பேசலாம் ....!!!


நீயும் நானும் பேசலாம் 
   நீண்ட நேரம் பேசலாம் !
காயுங் கனியப் பேசலாம் 
   காத லோடு பேசலாம் !
சாயுங் கால வேளையில் 
   தனித்துச் சிரித்துப் பேசலாம் !
பாயும் வெள்ள நீரெனப் 
   பாடிக் கொண்டே பேசலாம் !!

அன்னைத் தமிழில் இனிமையாய் 
   அடுக்கு மொழியில் பேசலாம் !
தென்னந் தோப்பி லுலவிடும் 
   தென்ற லோடு பேசலாம் !
சென்ற வற்றை எண்ணியே 
   சிந்தை குளிர்ந்து பேசலாம் !
அன்றில் பறவை போலவே 
   அன்பி லிணைந்து பேசலாம் !!

காப்பி யங்கள் பேசலாம் 
   கவிதை சொல்லிக் கலக்கலாம் !
மூப்பில் லாத குமரனை 
   முதலில் வணங்கிப் பேசலாம் !
வேப்ப மரத்து நீழலில் 
   விரும்பிக் கதைகள் பேசலாம் !
பூப்ப றிக்கும் போதிலும் 
   பொதுந லத்தைப் பேசலாம் !!

நாட்டு நடப்பைப் பேசலாம் 
   நடுவில் கொஞ்சம் கொரிக்கலாம் !
பாட்டி லுருகி மௌனமாய்ப்
   பார்வை யாலே பேசலாம் !
மீட்டு கின்ற வீணையாய் 
   விரல்க ளாலே பேசலாம் !
வாட்டுங் கவலை நீங்கிட 
   மனந்தி றந்து பேசலாம் !!

கொட்டும் மழையில் நனைந்துநாம் 
    கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாம் !
எட்டிப் பிடித்து நிலவினில் 
   இளமை துள்ளப் பேசலாம் !
சிட்டாய்ச் சிறகு விரிந்திடத் 
   திரிந்து பறந்து   பேசலாம் !
வெட்டிக் கதையாய் யிருப்பினும் 
    விடிய விடியப் பேசலாம் !!

உள்ளத் தேரி லேறியே
   உலகஞ் சுற்றிப் பேசலாம் !
கள்ள மில்லாக் கருத்தினைக் 
   கலந்து பேசிப் பகிரலாம் !
முள்ளாய்த் தைக்கும் சொற்களை
   முடிந்த வரைத்த விர்க்கலாம் !
அள்ளிப் பருகி இயற்கையின் 
   அழகில் மயங்கிப் பேசலாம் !!

அஞ்சி டாமல்   உண்மையை 
   அமைதி யாகப் பேசலாம் !
சஞ்ச லங்க ளின்றியே 
   சாந்த மாகப் பேசலாம் !
நெஞ்சம் மலர்ந்த அன்புடன்
   நேர்மை யாகப்  பேசலாம் !
பிஞ்சு மழலை போலவே 
   பேசா திருந்தும் பழகலாம் !!

சியாமளா  ராஜசேகர் 


( தலைப்புக்கு எழுதியது )










No comments:

Post a Comment