நீயும் நானும் பேசலாம்
நீண்ட நேரம் பேசலாம் !
காயுங் கனியப் பேசலாம்
காத லோடு பேசலாம் !
சாயுங் கால வேளையில்
தனித்துச் சிரித்துப் பேசலாம் !
பாயும் வெள்ள நீரெனப்
பாடிக் கொண்டே பேசலாம் !!
அன்னைத் தமிழில் இனிமையாய்
அடுக்கு மொழியில் பேசலாம் !
தென்னந் தோப்பி லுலவிடும்
தென்ற லோடு பேசலாம் !
சென்ற வற்றை எண்ணியே
சிந்தை குளிர்ந்து பேசலாம் !
அன்றில் பறவை போலவே
அன்பி லிணைந்து பேசலாம் !!
காப்பி யங்கள் பேசலாம்
கவிதை சொல்லிக் கலக்கலாம் !
மூப்பில் லாத குமரனை
முதலில் வணங்கிப் பேசலாம் !
வேப்ப மரத்து நீழலில்
விரும்பிக் கதைகள் பேசலாம் !
பூப்ப றிக்கும் போதிலும்
பொதுந லத்தைப் பேசலாம் !!
நாட்டு நடப்பைப் பேசலாம்
நடுவில் கொஞ்சம் கொரிக்கலாம் !
பாட்டி லுருகி மௌனமாய்ப்
பார்வை யாலே பேசலாம் !
மீட்டு கின்ற வீணையாய்
விரல்க ளாலே பேசலாம் !
வாட்டுங் கவலை நீங்கிட
மனந்தி றந்து பேசலாம் !!
கொட்டும் மழையில் நனைந்துநாம்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாம் !
எட்டிப் பிடித்து நிலவினில்
இளமை துள்ளப் பேசலாம் !
சிட்டாய்ச் சிறகு விரிந்திடத்
திரிந்து பறந்து பேசலாம் !
வெட்டிக் கதையாய் யிருப்பினும்
விடிய விடியப் பேசலாம் !!
உள்ளத் தேரி லேறியே
உலகஞ் சுற்றிப் பேசலாம் !
கள்ள மில்லாக் கருத்தினைக்
கலந்து பேசிப் பகிரலாம் !
முள்ளாய்த் தைக்கும் சொற்களை
முடிந்த வரைத்த விர்க்கலாம் !
அள்ளிப் பருகி இயற்கையின்
அழகில் மயங்கிப் பேசலாம் !!
அஞ்சி டாமல் உண்மையை
அமைதி யாகப் பேசலாம் !
சஞ்ச லங்க ளின்றியே
சாந்த மாகப் பேசலாம் !
நெஞ்சம் மலர்ந்த அன்புடன்
நேர்மை யாகப் பேசலாம் !
பிஞ்சு மழலை போலவே
பேசா திருந்தும் பழகலாம் !!
சியாமளா ராஜசேகர்
( தலைப்புக்கு எழுதியது )
No comments:
Post a Comment