Thursday, July 4, 2019

முதுமை ...!!!

தோல்மெலிந்து பார்வைமங்கி நடைதளரும் பருவம்
தூக்கத்தைத் தொலைத்துவிட்டு விட்டத்தை வெறிக்கும் !
கால்களிலே மூட்டுவலி உடனிருந்து கொல்லும்
கவலைகளின் சாயலினை முகவரிகள் சொல்லும் !
ஆல்போலும் அரவணைத்து நிழல்தந்த நெஞ்சம்
அன்புக்கும் ஏங்குகின்ற அவலந்தான் மிஞ்சும் !
பால்மனத்தோ டிருப்போரைப் புறந்தள்ள லாமா ?
பாசத்தைப் பாசாங்கென் றேயெண்ண லாமா ??
முதுமையினை வரமாகத் தான்கருதிப் போற்று
முதியோர்தம் வாய்மொழியே அனுபவத்தின் ஊற்று !
இதமான சொற்களினால் வாஞ்சையுடன் பழகு
இதுவுந்தான் இளையோரின் நற்பண்புக் கழகு !
உதவியென்று வருமுன்னர் கரங்களைமுன் நீட்டு
உடன்முதியோர் இல்லங்க ளையிழுத்துப் பூட்டு !
வதைபட்டு நமக்காக வாழ்ந்தவர்கள் தானே
வலியின்றி நாள்கழிக்க வகைசெய்தல் முறையே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment