Wednesday, July 24, 2019

வெல்வோமே ...!!!

ஈன்ற தாயின் கருணையினால் 
      இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில் 
       நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே 
       அகந்தை யின்றி நடைபோட்டு 
வான்போல் பரந்த உளத்தோடு
      வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே 
       தெளிந்த அறிவைப் பெறவேண்டும் ! 
பெருமை மிக்க பண்பாட்டைப்
       பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து 
       வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
       இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துக் கணக்கிட்டால் 
       கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும் 
       புரிதல் மிக்க உறவுகளும் 
கூட்டை விடுத்துப் போகையிலே 
       கூடத் துணையாய் வருவதில்லை !
ஆட்டம் அடங்கி விடுமுன்னே 
       ஐந்த டக்கி  வெல்வோமே !!

சியாமளா ராஜசேகர் 
       

No comments:

Post a Comment