Thursday, July 11, 2019

வண்ணப் பாடல் ...!!!



சந்தக்குழிப்பு
*********************

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ..... தனதானா
விரித்த செஞ்சடை யோசிவ னாரது
சிரத்தி லம்புலி யோநதி யோவென
வியப்பி லன்பொடு தாளினை யேநிதம் பணிவேனே !
மிடுக்கு டன்புலி யாடையொ டாடிடு
நிருத்த னின்புகழ் பாடிட வேமிக
விருப்பு டன்பனி நாதனை நாடிட மனமோடும் !
நெருப்பு டன்கனி வாய்நில மானவன்
துடிப்பு டன்தினம் நீர்வளி வானென
நிலைத்து நின்றிடு மீசனின் பேரரு ளினைநாடி !
நிழற்கொ துங்கிய வாறடி நீழலி
லணைத்து நெஞ்சொடு சேயெனை யாதரி
நினைத்த தும்பரி வாய்வர வேயுன தருளாலே !
சிரித்த செங்கனி மாதுளம் பூவென
இனித்த பைங்கிளி யாள்மொழி யாழது
செழித்த மங்கள மேனிய ளோடிணை நடராசா !
சிறப்பொ டைந்தொழி லாலுல காளுவ
குணித்த நந்தியின் மேலழ காய்வரு
திருப்பு றம்பிய நாதரு ரைசெயு பெரும்பேறே !
வருத்த மென்றுனை நாடிடு வோரது
பனித்த கண்களு மேகுள மாகிட
வழக்கை வென்றுயர் ஞானமும் வீடளி இறையோனே !
மருட்டி டுந்திரு மேனியில் நாகமும்
பொடித்த வெண்டிரு நீறது பூசியும்
மனத்தி லம்பல வாணனை யேதொழ வருவோனே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment