Tuesday, July 16, 2019

வெண்பாத்துணர் ...!!!




வெண்பாத்துணர்...!!!
******************************
( கண்....என்று தொடங்கி.....பார் .....என்று முடியும் பாக்கள் )
குறள் வெண்பா ...!!!
**************************
கண்ணன் மலரடி கண்டு நிதம்போற்றிப் 
பண்பாடப் பொங்குமின்பம் பார் .
நேரிசை சிந்தியல் வெண்பா ...!!!
*******************************************
கண்ணின் மணியாய்க் கருதி யன்புடன் 
வண்ண மலர்த்தூவி வாழ்த்திட - மண்ணுண்டோன்
பண்படச் செய்திடுவான் பார்.
நேரிசை வெண்பா ...!!!
*******************************
கண்ணன் குறும்புகள் கண்டால் உளமகிழும்
எண்ணத்தில் நிற்கு மினிமையாய் - வண்டாடுஞ்
சோலையில் கோபியரைச் சுண்டி யிழுத்திடும் 
பாலகன் பேரெழிலைப் பார்.
இன்னிசை வெண்பா ...!!!
*********************************
கண்ணுக்குக் கண்ணாகக் காத்திருந் தாலுமவன் 
வெண்ணெய் திருடும் விளையாட்டில் - விண்ணகமும் 
ஆங்கே களித்திருக்க ஆயன் அயர்வின்றிப்
பாங்குடன் ஆடுவான் பார்.
நேரிசை பஃறொடை வெண்பா ...!!!
*************************************************
கண்மணியே என்று கனிவொடு கொஞ்சிடினும் 
உண்ண அழைத்ததும் ஓடிவிடும் - விண்ணனைய 
நீலவண்ணன் சேட்டைகளால் நெஞ்சில் நிறைந்திருப்பான் 
ஆலிலையில் துயில்வான் அச்சமின்றிச் - சோலையில் 
ஆசையுடன் சுற்றிவரும் அன்பான கன்னியர்தம்
பாசத்தில் பூத்தணைப்பான் பார்.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment