Thursday, March 16, 2017

இதயக் கதவைத் திறவாயோ ...???


கொஞ்சிப் பேசி மயக்குகிறாய்
***கொட்டும் மழையாய் நனைக்கின்றாய்!
மஞ்சள் முகத்தில் இதழ்சிவக்க
***மலராய் விரிந்து சிரிக்கின்றாய்!
நெஞ்சத் துடிப்பில் உன்பெயரே
***நித்தம் கேட்கும் அறிவாயா?
வஞ்சி உனையே மணமுடிக்கும்
***வரத்தை எனக்குத் தருவாயா?


அலைகள் கரையை முத்தமிட்டுக்
***காத லாகிக் கரைகிறதே!
மலையை முகிலும் அணைத்தபடி
***மையல் கொண்டே உலவிடுதே!
தொலைவில் விண்மீன் விழிசிமிட்டி
***சுகமாய்க் கவிதை சொல்கிறதே!
சிலையே இன்னும் ஏன்தயக்கம்
***சிற்பி என்னைத் தழுவிக்கொள்!


காஞ்சிப் பட்டுச் சேலைகட்டி
***காலில் மெட்டி யொலியிசைக்க
வாஞ்சை யோடு பக்கத்தில்
***வஞ்சி நீயும் நின்றிருக்க
ஊஞ்ச லாடும் என்மனமும்
***உரிமை யாலே உனையணைக்க
நாஞ்சில் நாட்டுப் பொன்மகளே
***நாடித் துடிப்பும் கூடிடுதே!


பின்னிப் போட்ட கூந்தலிலே
***பிச்சிப் பூவும் மணக்கிறதே!
புன்ன கைக்கும் இதழ்களிலே
***புதிய பாடல் பிறக்கிறதே!
சன்னல் வழியே இளங்காற்றுச்
***சருமம் வருடிச் செல்கிறதே!
மன்னன் என்னைக் கண்டவுடன்
***மறைந்து செல்லல் முறைதானோ?


நதியின் கரையில் நாணல்போல்
***நளின மாக ஆடிடுவாய்!
மதியின் ஒளியாய்க் குளிர்வித்து
***மகிழம் பூவாய் மணந்திடுவாய்!
உதிக்கும் காலைக் கதிரொளியில்
***உதய கீதம் பாடிடுவாய்!
விதியால் பிரிய நேரிடிலோ
***விரட்டி விதியை வென்றிடுவேன் !


வான வில்லை சேலையாக்கி
***வடிவே வுனக்குத் தந்திடுவேன்!
கான மழையைப் பொழிந்ததிலே
***காதல் நெஞ்சைப் பகர்ந்திடுவேன்!
ஆன மட்டும் உன்னருகே
***அரணா யிருந்து காத்திடுவேன்!
வானம் பாடி பறவையைப்போல்
***வாழ்வில் இசையாய் நிறைவேனே!


பிறையாய்ப் புருவம் வளைந்திருக்க
***பெரிது மீர்க்கப் பட்டேனே!
உறையும் பனியின் பொழிவாக

***உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்தேனே!
நிறைந்த மனத்தில் உன்நினைவை
***நித்தம் சுமந்து களித்தேனே!
இறைவன் அருளால் உன்றனையே
***இணைப்பேன் என்றன் வாழ்வினிலே!


ஒன்றாய்க் கூடிக் களித்திருப்போம்
***உறவை மதித்தே உயிர்கொடுப்போம்!
அன்றில் பறவை போல்நாமும்

***அன்பைப் பகிர்ந்தே இணைந்திருப்போம்!
என்றும் புரிதல் விலகாமல்
***இனிமை யாகக் கழித்திடுவோம்!
கன்னல் மொழியில் கனிந்துருகிக்
***காதல் கவிதை வடித்திடுவோம்!


சந்தங் கொஞ்சும் கவியாலே
***சகியே உன்னை வாழ்த்திடுவேன்!
பந்த பாசம் மறவாமல்
***பரிவா யன்பைப் பகிர்ந்திடுவேன்!
சிந்து பாவில் கவினழகாய்
***தென்றல் போல வருடிடுவேன்!
உந்தும் காதல் உணர்வுகளால்
***உள்ளம் பூத்து மகிழ்வேனே!


இதயக் கதவைத் திறவாயோ
***இனியு மென்னை மறுப்பாயோ?
இதழில் கவிதை வடிப்பாயோ
***இளமை சுகத்தைத் தருவாயோ?
இதமாய்ப் பேசி அணைப்பாயோ
***இருளில் ஒளியாய்த் திகழ்வாயோ?
இதர மொழிக ளறிந்தாலும் 
***இனிமைத் தமிழால் இணைவோமே!

No comments:

Post a Comment