Thursday, March 23, 2017

ஜதியொடு ஆடுகிறாள் ...!!!



ஜல்ஜல் என்றே 
       சலங்கை  கட்டி 
       ஜதியொடு ஆடுகிறாள் - கன்னல்
        தமிழினில் பாடுகிறாள் !!
நில்நில் என்றே 
    நெஞ்சம் துடிக்க 
    நிறைமதி மோதுகிறாள்  - என்றன் 
    நினைவைக் கோதுகிறாள் !!

செம்மா துளையாய் 
    சிவந்த இதழ்களில்  
    சிரிப்பை உதிர்க்கின்றாள் - தங்கச் 
    சிலையாய் ஒளிர்கின்றாள் !!

வெம்மை யகற்றும்     
    வெண்ணில வெழிலாள்
    வியப்புறச் செய்கின்றாள் - உள்ளம்
    மென்மையாய்க் கொய்கின்றாள் !!

கண்களின் மொழியால் 
    காதலைச் சொல்லி 
    கடந்து செல்கின்றாள் - என்னுள் 
    கலந்து வெல்கின்றாள் !!
வண்ணக் கனவில் 
   வடிவாய் வந்தவள் 
   வாழ்வினில் இணைகின்றாள் - அன்பை 
    வளமாய்ப் பொழிகின்றாள் !!      

No comments:

Post a Comment