Saturday, March 11, 2017

வசந்தமினி வந்திடுமோ ...???

பட்டுடுத்திப் பொட்டுவைத்து பதுமையைப்போல் பந்தலிலே 
சிட்டுப்போல் சிரிப்புடனே சிங்கார பெண்ணிவளும்
கெட்டிமேளம் தான்முழங்க  கேட்டவுடன் வாழ்த்தொலிக்க
மட்டிலா மகிழ்வுடனே மங்கலநாண் ஏற்றாளே !

கட்டியவன் அரவணைப்பில் காதலிலே கனிந்தவளும் 
தொட்டிலாட கனவுகண்டு துள்ளியுளம் களித்தாளே!
கொட்டுமழைப் பொழுதொன்றில் கொண்டவனைப் பறிகொடுத்தாள் விட்டவளைப் பிரிந்தவனின் விதிமுடிந்து போயிற்றே !

பூவிழந்து பொட்டிழந்து புன்னகையும் தானிழந்துக்
 கேவியழும் அணங்கிவளோ கேதத்தில் உறைந்தாளே
பாவிமனம் படும்பாட்டைப் பாடிடவோர் மொழியுண்டோ 
ஓவியமாய் இருந்தவளும் உருக்குலைந்து போனாளே !

பாழ்வினையை நொந்துநொந்து பாவையவள் வடித்தாளே 
ஊழ்வினையோ உள்நெஞ்சில் ஓலமிட்டுக் கரைந்தாளே
ஆழ்மனத்தின் வேதனையை ஆண்டவனே தானறிவான் 
வாழ்வினிலே அவளுக்கு வசந்தமினி வந்திடுமோ ??

சியமாளா ராஜசேகர் 

No comments:

Post a Comment