Wednesday, March 29, 2017

பார்க்க கண் ஆயிரம் வேண்டுமம்மா !!!



முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள் - மாரி
>>>>முன்னைவினை தீர்க்கத் தேடி வந்தாள் 
தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலினைக் - கேட்டு 
>>>>சிந்தைக் குளிர்ந்தவள் ஓடி வந்தாள் !!

பம்பை உடுக்கையின் சத்தத்திலே - தேவி 
>>>>பாங்குடன் வீதியில் ஆடி வந்தாள் 
கும்மிக் கொட்டிப் பெண்கள் பாடிச்செல்ல - அன்னை 
>>>>கொஞ்சும் சிரிப்புடன் கூட வந்தாள் !! 

செல்லப் பிள்ளையாம் விநாயகன்முன் -செல்ல 
>>>செம்மயில் வாகனத்தில் தொடர்ந்தாள் 
மெல்லக் குலுங்கிடும் கைவளையும் - ஆட 
>>>மின்னலைப் போலவளும் படர்ந்தாள் !!

மஞ்சள் முகத்திலே குங்குமமும் - இட்டு 
>>>மஞ்சள் பட்டுச்சேலை கட்டிவந்தாள் 
குஞ்சமும் ஆடிடும் கூந்தலொடு - கோல 
>>>>கொண்டையில் பில்லையும் சூடிவந்தாள்  !! 

பின்னலில் பிச்சிப்பூ சூடியவள் - தம்மின்  
>>>>பேரழகால் உள்ளம் கொள்ளைகொண்டாள் 
சின்ன இடையினில் மேகலையும் - ஆட 
>>>>சிங்காரப் புன்னகை பூத்து வந்தாள் !!

வண்ணமலர் மாலை தோள்களிலே - தாங்கி 
>>>>மங்கள மாயவள் சுற்றி வந்தாள் 
கண்களிலே அருள் சிந்திடவே - தாயும் 
>>>>காட்சி கொடுத்திட பக்கம்வந்தாள் !!

சக்தியவள் கையில் சூலமுடன் - நின்று 
>>>>சாந்த சொரூபியாய்க் காட்சிதந்தாள்
அக்கினிச் சட்டிக ளேந்திவரும் - பக்தர் 
>>>>அன்பில் நெகிழ்ந்தவள் ஆசி தந்தாள் !!

வேப்பிலை வாசம் நிறைந்தவளாம் - அன்பாய் 
>>>வேண்டும் வரத்தைக் கொடுப்பவளாம் 
கூப்பிடு முன்னரே தாயவளும் - வந்து 
>>>>கோரிக்கை ஈடேறச் செய்பவளாம் !!

பங்குனிப் பொங்கல் விழாவினிலே  - தாயைப் 
>>>>பார்க்கக் கண் ஆயிரம் வேண்டும்மா 
பொங்கிடும் ஆனந்தம் நெஞ்சினிலே - என்றும் 
>>>>பூத்து நிறைந்திடும் வாழ்வினிலே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment