Monday, March 20, 2017

சிட்டே வாராய் !! ( உலக சிட்டுக்குருவி தினம் )

எங்கேநீ சென்றாயோ என்றுளம் வாடுதே 
தங்கயிட மின்றித் தவித்தாயோ ?- சிங்காரச்
சிட்டேவுன் கீச்சென்ற செல்லச் சிணுங்கலில்
மெட்டியொலி யும்தோற்கு மே !

சிறகடிக்கும் சின்னஞ் சிறுசிட்டே நீயும் 
பறந்துசென்ற தெங்கே பகர்வாய் ! - மறவாமல் 
வந்து மனமகிழ வைப்பாய்! குருவியே !
சிந்தை குளிர்ந்திடச் செய் .

மரக்கிளையில் கூடுகட்டி மக்களுடன் வாழ்ந்தாய் 
இரக்கமிலா நெஞ்சமுடன் யாரோ - விரட்டியது 
சொல்குருவி! என்றுமெங்கள் சொந்தம்நீ யல்லவா  
செல்லாதே வாழுவோம் சேர்ந்து .

கதிர்வீச்சால் நீயுமே காணாமற் போனாய் 
கதியின்றிச் சென்றாய் கடந்து!- அதிரூப 
சிட்டே! சிறகசைத்துச் சீக்கிர மாய்வந்து 
பட்டே பரிவாய்ப் பழகு .

No comments:

Post a Comment