Tuesday, March 21, 2017

கண்ணே வாராய் கனிவோடே

புன்னை வனத்தி லுனைக்கண்டேன் 
***பொலிவாய் மெல்லப் புன்னகைத்தாய் !
கொன்றை மலராய்ச் சிவந்திருந்தாய் 
***கொள்ளை யழகா லெனைவென்றாய் !
குன்றில் ஊதா நிறங்கொண்ட 
***குறிஞ்சிப் பூவாய்க் குளிர்வித்தாய் !
அன்பாய் இதயம் ஈந்திடுவாய் 
***அன்பே ! காதல் ரோஜாவே ...!!

அல்லி இரவில் மலர்வதைப்போல் 
***அழகாய் நீயும் இதழ்பூத்தாய் !
மல்லி வாசம் உளம்துளைக்க 
***வண்டா யுன்னைச் சுற்றிடுவேன் !
எல்லை யில்லா எழிலோடு 
***என்னும் மலர்ந்த தாமரையே !
முல்லைச் சிரிப்பில் விழுந்துவிட்டேன் 
***முத்த மொன்று தருவாயோ ...??

பாந்த முடனே பாவையுன்றன்
***பார்வை என்னைக் கவர்ந்திடுதே !
சாந்து பொட்டு நெற்றியிலே 
***சங்கு பூவாய்ச் சிரித்திடுதே !
கூந்தல் மீது பிச்சிபூ 
***குளிர்ந்து மனத்தைப் பரப்பிடுதே !
காந்தள் விரலால் எனைமீட்ட 
***கண்ணே வாராய் கனிவோடே ...!!

No comments:

Post a Comment