Thursday, March 16, 2017

புன்னகைப் பூவே பேசு ...!!

நிலவென உன்னைக் கண்டேன்
***நிம்மதி நெஞ்சில் கொண்டேன்!
மலரென வதனம் பூக்க

***மதுவுணும் வண்டா யானேன்!
வலம்புரிச் சங்கின் நாதம்
***வஞ்சியுன் குரலில் கேட்டேன்!
நலம்பெற வேண்டு மென்று
***நானுனை வாழ்த்து வேனே!


சந்தன முகமோ மின்னும்
***சந்திர வொளியை மிஞ்சும்!
சிந்திடும் சிரிப்பில் செக்கச் 

***சிவந்திட கமலம் பூக்கும்!
செந்தமிழ் மணக்கும் பேச்சில்
***தென்றலும் இதமாய் வீசும்!
மந்திர மாயஞ் செய்யும்
***மல்லிகைப் பூவின் வாசம்!


கண்களால் பதிலைச் சொல்வாய்
***காதலா லென்னை வெல்வாய்!
தண்டையும் சிலம்பும் கொஞ்ச

****தங்கமே அருகில் வாராய்!
பெண்ணுனைக் கண்ட பின்னே
***பிரமனே வியந்து நின்றான்!
வெண்ணிலா வொளியில் நானும்
***மெழுகென உருகி னேனே!


வேல்விழி யாலே என்னை 
***விரும்பிடும் கன்னி மானே !
கால்களில் கொலுசின் சத்தம் 
***காவலைத் தாண்டிக் கேட்கும் !
பால்முகம் பார்த்த பின்னே 
***பாவையே வருமோ தூக்கம் ?
ஆல்விழு தாக வென்னை 
***அரவணைப் பாயா தோழி ??

புன்னகைப் பூவே பேசு 
***பொன்னில வொளியாய் வீசு !
மென்னிடை வளைவில் தாங்கி 
***மெத்தையில் யாழாய் மீட்டு !
தென்றலாய்த் தழுவி நீயும் 
***தேனிசை யாகப் பாடு !
சென்றதை மறந்து விட்டு 
***செல்லமே வருவாய் இங்கே !

சத்திய மாகச் சொல்வேன் 
***சம்மத மெனக்குக் கிளியே !
சித்தமும் உன்பால் வைத்தேன் 
***சித்திரப் பாவை நீயே !
நித்தமுன் நினைவில் வாடும் 
***நெஞ்சினை வதைக்க லாமா ?
உத்தமி யுன்னைக் கூடி 
*** உலகையே வெல்வேன் நானே !

( அறுசீர் விருத்தம் )
விளம் மா தேமா 

No comments:

Post a Comment