Friday, March 17, 2017

கனவென்னும் கப்பலேறி ....!!!




காதலெனும் கடலினிலே கனவென்னும் கப்பலேறி 
மோதவந்த அலைநடுவே மோகனமாய் அவளோடு
காததூரம் போகுமுன்னே கார்மேகம் திரண்டுவர

ஆதவனும் கதிர்விரிக்க அழைத்துவந்தேன் கரையருகே!

கரையினிலே குளிர்காற்றில் கன்னிமயில் சிலிர்த்திருக்க 
நுரைபூக்கள் மணற்தொட்டு நோகாமல் முத்தமிட 
வரையாத ஓவியமாய் வனப்போடு நின்றவளை 
விரைவாக அணைத்தபடி விளையாடிக் களித்தேனே !

களிப்பினிலே கனிந்துருகிக் காதலியும் கொஞ்சுகையில் 
கிளிப்பேச்சில் மனம்கரைந்தேன் கெஞ்சுகையில் எனைமறந்தேன் 
நெளிவான சிற்றிடையில் நெஞ்சத்தைப் பறிகொடுத்தேன் 
துளித்துளியாய் மழைதெறிக்க சுகமாக உணர்ந்தேனே !

உணர்வினிலே கலந்தவளை உயிராக நினைத்திருந்தேன் 
கணநேரம் விலகாமல் கடல்வளியில் தவழ்ந்திருந்தேன் 
மணமுடிக்கும் நாளையெண்ணி மங்கையவள் கரம்பிடித்தேன் 
கணவனான தருணத்தில் கனவுகலைய வழிந்தேனே !!

No comments:

Post a Comment