Friday, March 10, 2017

நீலக் குருதி !!!




நித்தம் எழுதிக் குவித்திடவே 
***நீலக் குருதி நிரப்பிவிட்டேன் !
சத்த மின்றித்  தன்பணியைச் 
***சலிப்பே யின்றி அதுசெய்யும் !
எத்தர் மிகுந்த உலகத்தில் 
***எழுத்தால் புரட்சி செய்துவிடும் !\
கத்தி முனைபோல் கூர்மிகுந்து  
***கதற கதறக் கிழித்துவிடும் !

சிவப்புக் குருதி சிந்தாமல் 
***செம்மை யாகப் புரட்சிசெயும் !
துவட்டி யெடுக்கும் எழுத்துகளால்
***துணிச்ச லோடு நிதம்தாக்கும் !
தவறு நேர்ந்தால் தயக்கமின்றித் 
***தட்டிக் கேட்க முன்னிற்கும் !
அவல ஆட்சி கண்டிடிலோ 
***அரசைக் கூடக் கவிழ்த்துவிடும் !

கொடுமை கண்டால் கொதித்தெழுந்துக் 
***கொளுத்திப் பற்ற வைத்துவிடும் !
அடுப்பில் எரியும் விறகனைய
***அனற்சொல் லாலே பொசுக்கிவிடும் !
கெடுக்கும் தீய சக்திகளைக் 
***கிள்ளி யெறியத் துணையிருக்கும் !
ஒடுக்கும் வரையில் ஓயாமல்
***ஒலிக்கும் நீலக் குருதியுமே !!!

No comments:

Post a Comment